புதுச்சேரிக்கு சுற்றுலா சென்ற சென்னை ஐடி ஊழியர்கள்.. இசிஆரில் வரும் போது இப்படியாக ஆகணும்
புதுச்சேரி: சென்னை பல்லாவரம் நாராயணசாமி வீதியை சேர்ந்த மதன்குமார், பனையூரை சேர்ந்த கணேஷ் ஆகிய இருவரும் சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் இருவரும் புதுச்சேரிக்கு சுற்றுலாவாக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். ஜாலியாக சுற்றிய அவர்கள், திரும்பவும் சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அங்கிருந்த பேரிகார்டால் என்ன நடந்தது தெரியுமா? பாருங்கள்.
புதுச்சேரியை பொறுத்தவரை தென்னிந்தியாவின் கோவா என்று அழைக்கப்படுகிறது. இங்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும், கர்நாடகா, கேரளாவில் இருந்தும், ஆந்திராவில் இருந்தும் பலரும் சுற்றுலா வருகிறார்கள். தினமும் ஏராளமான மக்கள் சுற்றுலா வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. முழுமையாக சுற்றுலா நகராக கோவாவைப்போல் புதுச்சேரி உருவெடுத்துள்ளது. புதுச்சேரிக்கு சென்னையில் இருந்து ஒவ்வொரு வார இறுதியில் ஐடி ஊழியர்கள் பலர் சுற்றுலா செல்கிறார்கள். சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் புதுச்சேரியில் அறை எடுத்து தங்கி, ஜாலியாக இருப்பதுடன், புதுச்சேரியின் அழகை ரசித்துவிட்டு பைக்கில், அப்படியே திரும்புகிறார்கள். அப்படி நண்பர்கள் இரண்டு பேர் திரும்பி வந்த போது எதிர்பார்க்காத சம்பவம் நடந்தது.

சென்னை பல்லாவரம் நாராயணசாமி வீதியை சேர்ந்த வீரபத்திரன் மகன் மதன்குமாருக்கு 24 வயது ஆகிறது. இதேபோல் சென்னையை அடுத்த பனையூரை சேர்ந்த பாலமுருகன் மகன் கணேஷூக்கு 28 வயது ஆகிறது. இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் ஊழியர்களாக பணியாற்றி வந்தனர். புதுச்சேரியில் வார விடுமுறையை கொண்டாட நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டனர். இதில் மதன்குமார், கணேஷ் இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்தனர்.
இதற்கிடையில் அனைவரும் சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக நண்பர்கள் அனைவரும் சென்று கொண்டிருந்தனர். புதுச்சேரியை அடுத்த விழுப்புரம் மாவட்டம் அனிச்சங்குப்பம் கங்கைநகர் அருகே வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்காக போலீசார் தற்காலிகமாக பேரிகார்டு போட்டு தடுப்பு அமைத்திருந்தார்கள். அதில் மதன்குமார், கணேஷ் வந்த மோட்டார் சைக்கிள் வளைந்து சென்றபோது, புதுவையில் இருந்து சென்னை நோக்கி வந்த சுற்றுலா வேன் எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களில் கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதன்குமார் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சுற்றுலா வந்த நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications