இன்று அல்ல.. நாளை முதல்.. 11 மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழை.. சென்னை நிலவரம் என்ன?
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு: நம்பியூர் (ஈரோடு)- 3 செ.மீ, கூடலூர் பஜார் (நீலகிரி)- 2, மேல் கூடலூர் (நீலகிரி), தலைவாசல் (சேலம்), கொத்தவாச்சேரி (கடலூர்), வுட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), பார்வூட (நீலகிரி), ஹரிசன் மலையாளம் லிமிடெட், செருமுல்லி (நீலகிரி), நடுவட்டம் (நீலகிரி), பந்தலூர் தாலுக்கா அலுவலகம் (நீலகிரி) தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 39.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 21.08.2023- தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
22.08.2023: தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்.
23.08.2023: தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை, 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி , மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35- 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோர பகுதிகள்: 21.08.2023: தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடந்த ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை தமிழகத்தில் பதிவான மழையின் அளவு 167.3 மி.மீ. ஆகும். அது போல் இயல்பு மழை 178.5 மிமீ ஆகும். இயல்பிலிருந்து மைனஸ் 6 டிகிரி விலகியுள்ளது. அதிகபட்சமாக பதிவான மழையின் அளவு சென்னையில் 404.7 மி.மீ. ஆகும். அது போல் குறைந்தபட்சமாக பதிவான மழை தூத்துக்குடியில் 16 மி.மீ. ஆகும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications