இது செப்டம்பரா? இல்ல மே மாதமா! கொளுத்தும் வெயில்.. இன்று 13 மாவட்டங்களில் சதம்
சென்னை: பருவமழை தீவிரமடைய வேண்டிய இந்த நாட்களில், சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. இன்று 13 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரான்ஹீட்டை விட அதிகமாக பதிவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்த வரை கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கி இன்று வரை 34% கூடுதலாக மழை பொழிவை தென்மேற்கு பருவமழை கொடுத்திருக்கிறது. இந்த காலங்களில் ஒட்டுமொத்தமாக சராசரியாக 269.2 மி.மீ மழை பொழிந்திருக்க வேண்டும். ஆனால் 359.5 மி.மீ மழை பெய்திருக்கிறது. அதிகபட்சமாக நீலகிரியில் 1213.9 மி.மீ, கோவையில் 939.6 மி.மீ என மழை பெய்திருக்கிறது. குறைந்தபட்சமாக தூத்துக்குடியில் 50.4 மி.மீ, நாகப்பட்டினத்தில் 122.3 மி.மீ என மழை பதிவாகியுள்ளது. நாகையில் பெய்த மழை இயல்பை விட -38 சதவிகிதம் குறைவாகும். நாகை, திருவார், மயிலாடுதுறை என ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் மழை குறைவாக பெய்திருக்கிறது.

அதேபோல அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் லேசானது முதல் மிதமானது வர மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கடந்த சில நாட்களில் என்னதான் மழை இயல்பை விட அதிகமாக பெய்திருந்தாலும் தென் மாவட்டங்களில் உள்ள அணைகளின் நீர்மட்டம் மட்டுமே அதிகரித்து வந்தன. உள் மாவட்டங்களில் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர் மட்டம் போதுமான அளவுக்கு உயராமல் இருந்தது. கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக இந்த அணையின் நீர்மட்டம் போதுமான அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
இப்படி இருக்கையில் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று 10 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபரான்ஹீட் கடந்த நிலையில் இன்று சென்னை உட்பட 13 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை கடந்துள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications