தமிழகத்தில் 21 மாவட்டங்களை உருக்கிய வெயில்.. கரூரில் 111 டிகிரி கொளுத்திய சூரியன்! புலம்பும் மக்கள்!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொங்கு பகுதியை வெயில் பதம் பார்த்து வருகிறது. இன்று கரூர் பரமத்தியில் 111 டிகிரி ஃபரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
வழக்கமாக கோடைக்காலம் என்பது ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில்தான் ஆரம்பிக்கும். ஆனால், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி இறுதியிலேயே வெயில் தொடங்கிவிட்டது. மார்ச் மாதம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், ஏப்ரலில் உச்சம் தொட்டிருக்கிறது. இன்று மட்டும் 21 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபரான்ஹீட்டை கடந்திருக்கிறது. அதாவது,

கரூர் பரமத்தி - 111.2
வேலூர் - 110.66
ஈரோடு - 110.48
திருச்சி - 109.58
திருத்தணி - 108.05
சேலம் - 106.07
தருமபுரி - 106.7
திருப்பத்தூர் - 106.52
மதுரை விமான நிலையம்- 106.52
மதுரை நகர் - 106.52
தஞ்சாவூர் - 105.8
நாமக்கல் - 105.8
சென்னை மீனம்பாக்கம் - 105.26
கடலூர் - 104.36
பாளையங்கோட்டை - 104
கோவை - 103.64
சென்னை நுங்கம்பாக்கம் - 102.2
நாகப்பட்டினம் - 102.2
புதுச்சேரி - 100.4
காரைக்கால் - 100.4
அதிராம்பட்டிம் - 99.68
என வெயில் பதிவாகியுள்ளது. முன்னதாக இன்று மதியம் வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "அடுத்த ஏழு நாட்களை பொறுத்த அளவில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மே.3ம் தேதி தொடங்கி 5ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே.6 மற்றும் 7ம் தேதிகளில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்த அளவில், இன்று தொடங்கி மே.3ம் தேதி வரை அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். இதே மே.4 மற்றும் 5ம் தேதியில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை குறையக்கூடும்.
இன்று தொடங்கி அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். மே.3ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39°-43° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38°-40° செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36°-39° செல்சியஸ் இருக்கக்கூடும்.
ஈரப்பதத்தை பொறுத்த அளவில், மே.5 வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும். அடுத்த 3 தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த அளவில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" என வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications