வெளுத்துக் கட்டிய மழை.. வெள்ளத்தில் மிதக்கும் கோவை.. களத்தில் இறங்கிய 6 ஆயிரம் ஊழியர்கள்
கோவை: கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று கொட்டித் தீர்த்த மழையால் பல்வேறு பகுதிகள் நீரில் மிதக்கின்றன. இதைத்தொடர்ந்து, கோவை மாநகராட்சியில் உள்ள 6000 பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். மழை பாதிப்பு குறித்து பொதுமக்களிடம் இருந்து வரும் அனைத்துப் புகார்களும் உடனடியாக சரி செய்யப்பட்டு வருவதாக கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே நேற்று தொடங்கி வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வரும் அக்டோபர் 16 ஆம் தேதி சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. மழை காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கவுண்டம்பாளையம், காந்திபுரம், உக்கடம், ராமநாதபுரம், வடவள்ளி, லாலிரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
இதனால், பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் பல பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். முக்கிய சாலைகளான கோவை மேட்டுப்பாளையம் சாலை, அவிநாசி சாலை, பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை, சக்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
கோவை, உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் கீழ் சுரங்கப்பாதையில் சுமார் 8 அடி அளவிற்கு மழை தண்ணீர் தேங்கியிருந்தது. இந்த மழை நீர் முழுமையாக அகற்றப்பட்ட நிலையில் சேறுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் இன்று காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கோவையில் 3 மணி முதல் 4 மணி நேரம் வரை தீவிர மழைப் பொழிவு 16 முதல் 18 சென்டிமீட்டர் வரை பெய்துள்ளது. மழை காரணமாக நகரில் சுரங்கப் பாதைகளில் தேங்கி இருந்த தண்ணீர் அகற்றப்பட்டு வருகின்றது. லங்கா கார்னர் சுரங்கப் பாதையில் உடனடியாக தண்ணீர் அகற்றப்பட்டது. கிக்கானிக் பள்ளி சுரங்கப் பாதையும் உடனடியாக திறக்கப்பட்டது.
உப்பிலிபாளையம் சுரங்கப் பாதையில் பலத்த மழை பெய்ததால் 8 அடி முதல் 10 அடி வரை தண்ணீர் தேங்கியது. தற்போது பணிகள் நிறைவு பெற்றுள்ளது. உப்பிலிபாளையம் சுரங்கப்பாதை இன்னும் சிறிது நேரத்தில் போக்குவரத்திற்காக திறந்து விடப்படும். நகரில் கதிரவன் நகர் பகுதியில் சங்கனூர் ஓடையில் சுவர் உடைந்து தண்ணீர் சென்றுள்ளது. உடைந்த பகுதி உடனடியாக அடைக்கப்பட்டது.
பல்வேறு பகுதிகளில் சேதமைடந்த சாலைகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மழை காரணமாக பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களின் புத்தகங்களுக்கு மாற்றாக புதிய புத்தகம் வழங்கப்படுகிறது. ஆவாரம்பாளையம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள பட்டுள்ளது. 30 பேர் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழை நீரில் சேதமடைந்த சான்றிதழ்கள் உடனடியாக கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் உடனடியாக வழங்கப்படும். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சியில் உள்ள 6,000 பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் களத்தில் உள்ளனர். பொதுமக்களிடம் இருந்து வரக்கூடிய புகார்கள் உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வருகிறது.
மழை காரணமாக ஏழு இடங்களில் மரம் சாய்ந்துள்ளன. அடுத்த மழை வந்தால் அதனை சந்திக்க மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது. மாநகரில் 15 முதல் 20 இடங்களில் மழை நீரால் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வந்தது. அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே அனைத்து இடங்களிலும் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு முறை அந்த இடங்களை பார்வையிடப்பட்டு வருகிறது.
ஆவாரம்பாளையம் பகுதியில் தண்ணீரால் பாதிக்கப்பட்ட 30 பேருக்கு வேண்டிய உபகரணங்கள், உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. கோவை நகரில் இடியும் நிலையில் உள்ள சுவர்கள், கட்டடங்கள் போன்றவை அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை நகரில் உள்ள அனைத்து குளங்களும் நிறைந்துள்ளன. செல்வசிந்தாமணி குளம் நிரம்புவதற்கு ஒரு அடி முன்னதாகவே தண்ணீர் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications