48 மணி நேரத்தில் 75 உயிர்களை குடித்த வெயில்.. வட மாநிலங்களில் தீவிரமடையும் வெப்ப அலை!
டெல்லி: கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் வெப்ப அலை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் வட மாநிலங்களில் 75 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வழக்கமாக ஏப்ரல் மே மாதங்களில் வெயில் பட்டையை கிளப்பும். ஆனால், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாதமே வெயில் தனது வேலையை காட்ட தொடங்கிவிட்டது. தென் மாநிலங்களில் மே மாதம் தொடக்கத்தில் இதமான வானிலை நிலவியது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மழை பெய்தது.

ஆனால் வட மாநிலங்களின் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே இருந்தது. ராஜஸ்தான் தொடங்கி மேற்கு வங்கம் வரை வெயில் தீவிரமாக இருந்தது. பல இடங்களில் 50 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகியிருந்தது. வெயில் மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வட மாநிலங்களில் கடந்த 48 மணி நேரத்தில் 75 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 25 பேர் தேர்தல் பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகபட்சமாக ஒடிசாவில் வெப்ப அலை காரணமாக 36 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் 20 பேரும், பீகாரில் 14 பேரும், ஜார்க்கண்டில் 4 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒடிசாவில் மட்டும் வெப்ப அலையால் பக்கவதாம் பாதிப்புகளுடன் 1,300 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரப் பிரதேசம், பீகார், கிழக்கு மற்றும் மேற்கு மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகள், ஒடிசா, ஜார்க்கண்டின் சில பகுதிகள், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற பகுதிகளில் வெயிலின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, நேற்று கான்பூரில் அதிகபட்சமாக 48.2 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. ஹரியானாவின் சிர்சா 47.8 டிகிரியும், டெல்லியின் அயநகரில் 47 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது.
மாநில அளவில் பார்த்தால், பீகாரைப் பொறுத்தவரை, பெரும்பாலான இறப்புகள் போஜ்பூரில் பதிவாகியுள்ளன. இங்கு 5 வாக்குச் சாவடி பணியாளர்களும், ரோஹ்தாஸில் 3 பணியாளர்களும், கைமூர் மற்றும் அவுரங்காபாத் மாவட்டங்களில் தலா ஒரு பணியாளர் என மரணம் பதிவாகியுள்ளது.
ஒடிசாவில், ரூர்கேலா நகரம், ஜார்சுகுடா, சம்பல்பூர் மற்றும் பலங்கிர் மாவட்டங்களில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. ஜார்சுகுடாவில் உயிரிழந்தவர்களில் கணிசமானோர் ஓட்டுநர்கள் என சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே வெப்ப அலை காரணமாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த, பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்திருந்த நிலையில் அவர்களை தொடர்ந்து 48 மணி நேரத்தில் 75 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications