வடக்கையும் தெற்கையும் புரட்டி எடுக்க போகும் மழை.. 8 மாவட்டங்கள் ரொம்ப முக்கியம்! மெட் கொடுத்த அலர்ட்
சென்னை: தமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, குமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கோடை வெயில் கடந்த ஆண்டுகளை விட சற்றி அதிகமாகவே கொளுத்தி வந்தது. குறிப்பாக பகல் நேரங்களில் அதிக வெப்பத்தை உணர்ந்ததால் மக்கள் வெளியே வரவே தயங்கும் நிலை ஏற்பட்டது.

குறிப்பாக முதியவர்கள், குழந்தைகளுக்கு பல்வேறு விதமான வெயில் கால நோய்கள் ஏற்பட்டன. இந்த நிலையில் கோடை மழைக்குப் பிறகு தற்போது, ஆடி மாதம் தொடங்கி இருக்கும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தென்காசி, திண்டுக்கல், திருநெல்வேலி, கோவை, உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதேபோல தேனி, மதுரை, நெல்லை, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில், 8 மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று பிற்பகல் 1 மணிக்குள் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, குமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று ( 05.08.2024) பிற்பகல் 1 மணிக்குள் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஏற்கனவே மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே வங்கக் கடல் பகுதிகளில் 8 ஆம் தேதி வரை பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications