நீலகிரியில் கனமழை! சப்தமில்லாமல் பிளந்த கூடலூர்- வயநாடு சாலை! 20 அடிக்கு விரிசலால் பரபரப்பு
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தொடர் மழையால் வயநாடு செல்லும் மலைப்பாதையில் விரிசல் ஏற்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வயநாடு செல்லும் கைதொல்லி மலைப்பாதை சாலையில் ஓரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

சுமார் 20 அடி நீளத்திற்கு தடுப்புடன் சாலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்துள்ளது. நெடுஞ்சாலைத் துறையினர் தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து வாகனங்கள் செல்லாதவாறு தடுப்புகளை அமைத்தனர்.
வான ஓட்டிகள் கவனத்துடன் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில் சப்தமே இல்லாமல் சாலையில் விரிசல் விடுகிறது. லேசான விரிசல் பிறகு அப்படியே பாலம் பாலமாக வெடிக்கிறது. 20 அடி நீளத்திற்கு இது போல் சாலை விரிசல் அடைந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கல்லாறு, ஹில் குரோவ் ரயில் நிலையங்களுக்கிடையே உள்ள தண்டவாளத்தில் மண், பாறைகள் சரிந்து மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அது போல் நீலகிரி மாவட்டம் கூடலூரில் கனமழை பெய்தது.
மழை காரணமாக சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது. அங்குள்ள வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அத்துடன் கைதொல்லி சாலையோரத்தில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. இது போல் குன்னூர், கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழைக்கு சில இடங்களில் மரங்களும் முறிந்து விழுந்தன.
மழையால் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையோரம் உள்ள மரப்பாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மலை ரயில் பாதையில் பாறை விழுந்ததால் ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை ரயில் இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவையில் கோடை மழை தீவிரம் அடைந்த நிலையில் அங்கு தினந்தோறும் மழை பெய்து வருகிறது.
இந்த மழையால் திருச்சி, அவினாசி, சத்தி செல்லும் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அவினாசி சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதி, வடகோவை மேம்பாலத்தின் கீழ் பகுதி, கிக்கானி பள்ளி அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதி உள்பட பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. லங்கா கார்னர் பகுதியில் தேங்கிய தண்ணீரால் அந்த பகுதியில் ஆம்புலன்ஸ் சிக்கிக் கொண்டது.
கோவை சிங்காநல்லூர் பஸ்நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. இதனால் பயணிகளும் வியாபாரிகளும் அவதியடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை, பேச்சிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருதிறது. நீர் நிலைகள் நிரம்பிவிட்டதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அது போல் மதுரையில் நேற்று மாலை மணிக்கணக்கில் பெய்த மழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் மக்கள் தூக்கமில்லாமல் தவித்தனர். வைகை ஆற்றிலும் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது. தென் மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதால் தென் மாவட்டங்களுக்கு அதிக மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.












Click it and Unblock the Notifications