சென்னைக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை... காலை 8.30 மணி வரை மிக கனமழை பதிவாக வாய்ப்பு
சென்னை:சென்னைக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை காலை 8.30 மணி வரையிலான காலகட்டத்தில் சென்னையில் கனமழை பதிவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் திங்கள்கிழமை இரவு தொடங்கிய மழை விட்டு விட்டு செவ்வாய்கிழமை தொடந்த நிலையில், இரவு முழுவதும் கனமழை பெய்து வருகிறது.
வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது, வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்ற காலை அறிவித்தது. இந்நிலையில் இன்று உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது

அதன்படியே சென்னையில் இன்று சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது. சென்னையில் சோழிங்கநல்லூர், தாம்பரம், குரோம்பேட்டை, பள்ளிக்கரணை, மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், அடையாறு, வேளச்சேரி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணா நகர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மணலி, மாதவரம், தண்டையார் பேட்டை என பல இடங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று மாலை 6 மணி வரை 4.6 செ.மீ மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 7.29 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
இதேபோல் கோடம்பாக்கத்தில் 7 செமீ மழையும்,, ஆலந்தூரில் 7 செமீ மழையும், உத்தண்டியில் 6.6 செமீ மழையும், தேனாம்பேட்டையில 6.3 செமீ மழையும், அடையாறில் 6 செமீ மழையும் பெய்துள்ளது. பெருங்குடியில் 5.8 செமீ மழையும், மீனம்பாக்கத்தில் 5.8 செமீ மழையும், அண்ணா நகரில் 5 செமீ மழையும் பெய்துள்ளது.
இந்நிலையில் சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இரவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களிலும் காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல் சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு நவம்பர் 15ம் தேதிக்கு ஆரஞ்சு அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் நாளையும் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடலூர், நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
சென்னையை பொறுத்தவரை நாளை மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, புதுக்கோட்டை, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications