யாராவது இருக்கீங்களா! அக்கா சாப்பாடு வேணுமா?.. படகில் சென்று உணவளித்த நடிகை ரஞ்சனா நாச்சியார்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதியில் மக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார் சின்னத்திரை நடிகை ரஞ்சனா நாச்சியார்.
சென்னை வழியாக ஆந்திராவுக்கு சென்ற மிக்ஜாம் புயல் போகும் போது வடதமிழகத்தை உலுக்கிவிட்டு சென்றது. குறைந்த அளவிலான காற்று இருக்கும் என்றும் ஆனால் மழை அதிகளவு பெய்யும் என்றும் சொல்லப்பட்டது.

அதன்படி சென்னையில் டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் பெய்த மழையின் அளவு 400 மி.மீ. என பதிவாகியுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தை போல் சென்னையே மிதந்து வருகிறது.
புயலும் மழையும் நின்ற நிலையிலும் ஆங்காங்கே மீட்பு பணிகள் இன்னமும் நடந்து கொண்டுதான் வருகின்றன. பல இடங்களில் ஏரி உடைந்தும் ஆறுகளில் உபரி நீரும் ஊர்களுக்குள் வந்துவிட்டதால் ஆங்காங்கே 4 அடி, 5 அடி, 15 அடி என தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 500க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பிவிட்டன. இவற்றால் ஊருக்குள் தண்ணீர் புகுந்து விட்டது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பரணி புத்தூர் ஊராட்சியில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால் மக்கள் உணவு இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அப்பகுதியில் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்களே வசிப்பதால் வேலைக்கும் செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே உணவும் இன்றி முடங்கி கிடக்கிறார்கள். இந்த நிலையில் சின்னத்திரை நடிகை ரஞ்சனா நாச்சியார் அவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார்.
முட்டி வரை இருக்கும் இடங்களில் நடந்தே சென்ற ரஞ்சனா இடுப்பளவு தண்ணீர் இருந்த இடங்களில் படகில் சென்றார். அப்போது அக்கா யாராவது இருக்கீங்களா, சாப்பாடு வேணுமா என கேட்டு கேட்டு ஒவ்வொரு வீடுகளாக கொடுத்து வந்தார். அவர் நடந்து வரும் போதே முட்டிக்கு மேல் தண்ணீர் இருந்தது. சீரியல் நடிகை ரஞ்சனா, வழக்கறிஞரும் கூட!
அவர் சமூக ஆர்வலருமாவார். குன்றத்தூர் அருகே ஓடும் அரசு பேருந்தில் மாணவர்கள் கூரை மீது ஏறியதை தட்டி கேட்ட அவர் அந்த மாணவர்கள் சிலரை தாக்கியதுடன் டிரைவர், கன்டக்டரையும் அவதூறாக பேசியதாக ரஞ்சனா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.












Click it and Unblock the Notifications