‛வாபஸான ரெட் அலர்ட்’.. தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும்! இந்த லிஸ்ட்டை பாருங்க
சென்னை: தமிழகத்தில் இன்று விடுக்கப்பட்ட மிக கனமழைக்கான ‛ரெட் அலர்ட்' வாபஸ் பெறப்பட்டுள்ளது. இருப்பினும் கூட 3 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், 13 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பும் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 5 நாட்களாக மாநிலம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான் நேற்றைய தினம் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது.

அதன்படி நேற்றும் பல மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்தது. அதேபோல் இன்றைய தினம் மேற்கு தொடர்ச்சி மாலை மாவட்டங்களான தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்டவற்றில் இன்றும், நாளையும் அதி கனமழைக்கான ‛ரெட் அலர்ட்டை' சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருந்தது.
ஆனால் காலநிலை மாற்றத்தால் அந்த 4 மாவட்டங்களில், சிவப்பு எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது. இருப்பினும் கூட வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழையும், 13 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாட்டில் தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதேபோல் கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. அதேபோல், நாளை (புதன்கிழமை) தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் மே 23ம் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதுதவிர அடுத்த 5 நாட்களுக்கு குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள், கேரள-கர்நாடக கடலோர பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீச வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதுமட்டுமின்றி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (புதன்கிழமை) உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த தாழ்வு பகுதி, மே 24ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் வருகிற 23ம் தேதிக்குள் கரைக்கு திரும்ப வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
வெப்பநிலையை பொறுத்தவரையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இயல்பைவிட குறைந்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் கணித்து கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications