அடுத்த 2 மணி நேரம்.. கோவை டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை.. வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் குமரி, தென்காசி, திருச்சி, நீலகிரி, கோவை உள்பட 10 மாவட்டங்களில் லேசான இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் நெமிலி மற்றும் அரக்கோணம் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெயில் ஒருபுறம் அடித்தாலும், அவ்வப்போது ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி உள்ள மாவட்டங்களில் லேசான மழை பெய்து வருகிறது. ஒருசில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை, சேலம், தருமபுரி, நாமக்கல், ஈரோடு, ராணிப்பேட்டை, திருச்சி, கோவை, தென்காசி, நீலகிரி, குமரி ஆகிய 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோல் நெமிலி மற்றும் அரக்கோணம் பகுதிகளிலும் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், இன்று மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
அதற்கடுத்த இரண்டு தினங்களில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒரிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்றும் நாளையும், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும் வலுவான தரைக்காற்று 30 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். 31 முதல் 4ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 29 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications