தீபாவளி முடிஞ்சது.. ஆனா மழை இன்னும் முடியல! சென்னை + 17 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் இன்று சென்னை உட்பட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த ஜூலையில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலான மழைப்பொழிவை கொடுத்திருக்கிறது. ஆனால் சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை போதுமான அளவுக்கு மழை பெய்யவில்லை. இப்படி இருக்கையில் வடகிழக்கு பருவமழை பரவலாக மழையை கொடுத்திருக்கிறது. அக்டோபர் 1ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை நெற்று வரை இயல்பைவிட 25% அதிகமாக பெய்திருக்கிறது. அதேபோல, டெல்டா மாவட்டங்களிலும் மழை அதிக அளவு பெய்திருக்கிறது.

தீபாவளியான நேற்றும், நேற்று முன்தினமும் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியிருக்கிறது. குறிப்பாக, அக்.30ம் தேதி சென்னையில் ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ வரை மழை பதிவானது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் புகுந்தது. இப்படி இருக்கையில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது, காலை 10 மணி வரை சென்னை உட்பட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், விழுப்புரம், கரூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, ஈரோடு மற்றும் திருப்பூரில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தீபாவளியையொட்டி 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை விடுக்கப்பட்டிருக்கிறது. தீபாவளியான நேற்று கறி எடுத்து சமைத்து சாப்பிட்டு ஓய்வெடுத்த மக்கள், இன்று வெளியே கிளம்ப திட்டமிட்டிருந்தனர். ஆனால் மழை காரணமாக இந்த திட்டத்தை ஒத்தி வைக்க மக்கள் யோசித்து வருகின்றனர்.
முன்னதாக மழை குறித்து நேற்று வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சுனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நவம்பர் 3ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 04.11.2024 முதல் 06.11.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications