குளுகுளுவென மாறும் தமிழகம்.. இன்று 13 மாவட்டங்களில் மழை அடிச்சு வெளுக்கப் போகுது
சென்னை: தமிழகத்தில் இரவு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, இன்றும் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெயில் சுட்டெரிப்பதுபோல கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்தி வந்தது. கடும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். மழை, வெயில் என்ற மாறி மாறியிருந்த பருவ நிலையின் மாற்றம் மக்களை கடுமையாக பாதித்திருந்த நிலையில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்தது.

மாலை முதல் பெய்யத் தொடங்கிய மழை இரவு முழுவதும் பல மாவட்டங்களில் நீடித்தது. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக அடித்து வெளுத்த மழையால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். கோவையில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது.
மதுரையில் சூறாவளிக் காற்றுடன் கூடிய பெய்த பலத்த மழை காரணமாக ஆங்காங்கே மரங்கள் சாலைகளில் சரிந்து விழுந்தன. கோரிப்பாளையம், முனிச்சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது. இதனால், அப்பகுதிகளில் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது.
இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமத்துக்குள்ளாகினர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மழை கொட்டித் தீர்த்தது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, திருவாரூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய பகுதிகளிலும் 3 ஆவது நாளாக மழை பெய்தது. திருச்சி மாவட்டம், பி.மேட்டூர், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து மழை கொட்டித் தீர்த்தது. கரூர், சேலம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது.
நேற்று இரவு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பெய்த பலத்த மழை மற்றும் இன்றும் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருவாரூர், நாகை, சேலம், நீலகிரி, ஈரோடு, கடலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் (மில்லி மீட்டரில்): ஜெயங்கொண்டம்- 88, சுத்தமல்லி அணை -61, அரியலூர் -60, ஈரோடு- 49, எலந்த குட்டைமேடு- 35, சூளாங்குறிச்சி -109, கடையநல்லூர்- 95, மணிமுத்தாறு அணை- 76, தியாகதுருகம்- 60, கள்ளக்குறிச்சி- 38, உளுந்தூர்பேட்டை- 34, குருந்தன்கோடு -32, முள்ளங்கி விளை- 28, திற்பரப்பு -28, பஞ்சப்பட்டி- 46, க.பரமத்தி- 41, கடவூர்- 38, கரூர்- 28, மைலம்பட்டி- 26 மழை அளவு பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications