மக்களே அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் வெளுக்க போகும் மழை.. சென்னை, செங்கல்பட்டு உள்பட 14 மாவட்டம்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இரவு 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவாரூர், தஞ்சாவூர் உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது சூடுபிடித்துள்ளது. பருவமழை கொஞ்சம் தாமதமாக தொடங்கியது. எனினும் ஆரம்பத்தில் குறைவான மழையே இருந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

இந்த நிலையில் இன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்க தொடங்கியது. இன்று மதியம் தொடங்கிய மழை பல்வேறு இடங்களில் பரவலாக பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்து இருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இரவு 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களிலும் காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல் சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications