குடை ரெடியா இருக்கா? அடுத்த 2 மணி நேரத்தில்.. சென்னை உள்பட 15 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், ஈரோடு, கோவை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒருவாரமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் கூட விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதேபோன்று குமரி, தென்காசி மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

நேற்று தமிழகத்தின் கோவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை , நீலகிரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக கோவை வால்பாறை, சின்கோனாவில் 5 செமீ அளவிற்கு மழை பெய்துள்ளது. இன்றும் தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், நாமக்கல், சேலம், கள்ளுக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த ஒரு வார அப்டேட்டில் கூறப்பட்டிருப்பதாவது;- நேற்று (07-09-2024) காலை வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (08-09-2024) காலை 05:30 மணி அளவில் மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுபெற்று, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 08:30 மணி அளவில் கலிங்கபட்டினத்திற்கு (ஆந்திரா) கிழக்கே 280 கீ.மீ, கோபால்பூற்கு (ஓடிசா) கிழக்கு-தென்கிழக்கே 230 கீ.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா மேற்கு வங்காளம் கடற்கரை பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெறக்கூடும். மேலும் இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, 9 ஆம் தேதி மாலை/இரவு வாக்கில் ஓடிசா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள கடற்கரையை பூரி (ஒடிசா) - தீகா (மேற்கு வங்காளம்) இடையே கடக்க கூடும்.
08.09.2024 மற்றும் 09.09.2024: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். 10.09.2024 முதல் 14.09.2024 வரை: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications