செத்து போயிருப்போம்.. என் அப்பாவை காணோம்! கண்கலங்க வைத்த சென்னை சிறுவன் -கழுத்தளவு நீரில் தத்தளிப்பு
சென்னை: வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட சிறுவன் மீட்கப்பட்ட பிறகு என் அப்பாவை காணவில்லை என்று அழுதது அனைவரையும் கண்கலங்க வைத்து இருக்கிறது.
இந்த நிலையில் சென்னை மேற்கு தாம்பரத்தில் வெள்ளக்காடாக காட்சி அளித்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் படகில் சென்று களமிறங்கி பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் 75 சதவீதத்துக்கும் அதிகமாக தண்ணீர் தேங்கி கிடந்தது. கழுத்தளவு தண்ணீரில் பெண்கள், குழந்தைகள் தத்தளித்துக்கொண்டு இருந்தனர். உயிருக்கு போராடிய அவர்களின் வீட்டுக்குள் புகுந்து மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டனர்.

நீண்ட நேரமாக நீரில் இருந்ததால் அவர்களின் உடலில் வெப்பம் குறைந்து மிகவும் சோர்ந்த நிலையில் காணப்பட்டனர். அவர்களின் உடலை உஷ்ணப்படுத்தி படகில் வைத்தே முதலுதவி செய்தனர். அப்போது மீட்கப்பட்ட சிறுவன் பேசும் வீடியோ வெளியாகி காண்போரை கண்கலங்க வைத்து உள்ளது. தாயும் மகனும் மீட்கப்பட்டு உள்ள நிலையில் தந்தை எங்கே என சிறுவன் கேட்கும் காட்சி சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
"இங்கே உள்ளேயே இருந்து செத்துப் போயிருப்போம். எங்க அப்பாவையே காணோம். எங்க அப்பா எங்களை தனியாக விட்டுவிட்டு எங்கே போய்விட்டார்? இந்த பகுதி முழுவதும் தண்ணீர் நிரம்பிவிட்டது. நான், எங்க அம்மா மட்டும்தான் இருந்தோம். அப்பா எல்லாம் எங்கே போனார்கள்? எங்க அப்பா இருந்தால் கூட எங்களை இழுத்து சென்று இருப்பார் என்று பார்த்தேன். ஆனால், அவர் வரவில்லை." என்றார் அந்த சிறுவன்.
அந்த சிறுவனின் தாய் பேசுகையில், "தண்ணீர் வரும் என்று யாருமே எங்களிடம் சொல்லவில்லை. என் கணவர் இப்பகுதியில் தண்ணீர் வராது என்று சொன்னார்கள். வீட்டிலேயே இரு.. வெளியில் வராதே என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்கள். எனவே நாங்களும் வீட்டிலேயே இருந்தோம். வெளியில் வரவே இல்லை. அவரும் இன்னும் வரவே இல்லை. அதிலிருந்து தண்ணீரில் தத்தளித்துக்கொண்டு இருக்கிறோம். கைகளை அசைத்து காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டு இருந்தோம். யாருமே வரவில்லை. சிலர் நீந்தி வர சொன்னார்கள். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் உயர்ந்துகொண்டே வந்து கழுத்து வரை நின்றது. அரிசி எல்லாமே நீரில் மூழ்கி வீணாகிவிட்டது. யாருமே சாப்பிடவில்லை." என்றார்.












Click it and Unblock the Notifications