மிக்ஜாம்! சென்னையில் நாளை முதல் 3 நாட்களுக்கு கட்டுமான பணிகளை நிறுத்துங்கள்.. பறந்த உத்தரவு!
சென்னை: சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்குமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கட்டுமான நிறுவனங்களுக்கு மாநகராட்சி துணை ஆணையர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் வங்கக் கடலில் மிக்ஜாம் புயல் நிலவி வருகிறது. இது நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

இதனால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புயலால் நாளை முதல் 3 நாட்களுக்கு சென்னையில் கனமழையும் பலத்த காற்றும் வீசும். இதனால் சென்னையில் நடைபெற்று வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள்.
அது போல் கட்டுமான பணிகளுக்கான பொருட்களான ஜன்னல், கதவு, டிராலி, கம்பி, ஏணி, ஸ்டூல் உள்ளிட்டவைகளை தரை தளத்தில் பாதுகாப்பாக கட்டி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்டுமான பணிகளால் ஏற்படும் விபத்துகள் தவிர்க்கப்படும்.
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நள்ளிரவு தென் மேற்கு வங்கக் கடலில் புதுவையிலிருந்து சுமார் 630 கி.மீ. கிழக்கு- தென்கிழக்கேயும் சென்னையிலிருந்து 450 கி.மீ. கிழக்கு தென் கிழக்கிலும் நிலவுகிறது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் நாளை டிசம்பர் 3ஆம் தேதி புயலாகவும் வலுப்பெற்று, 4ஆம் தேதி காலை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள வடதமிழக- புதுவை கடலோர பகுதிகளில் நிலவுக் கூடும். பிறகு கடலோர பகுதிகளை ஒட்டி வடதிசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கடக்கக் கூடும்.
கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். கடலில் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மிக்ஜாம் புயலானது கரையை கடக்கும் நேரத்தில் சுமார் 80 முதல் 100 கி.மீ. வரை காற்று வீச வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. 4ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்யக் கூடும் என்பதால் அன்றைய தினம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications