சென்னை டூ டெல்டா வரை.. அடித்து துவைக்கும் வெயில்! இன்னைக்கும் சம்பவம் இருக்கு! வெதர்மேன் வார்னிங்
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருந்தாலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக, சென்னை தொடங்கி டெல்டா மாவட்டங்கள் வரை வெயில் கடுமையாக இருக்கிறது. இந்நிலையில் இன்றும் வெயில் தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
இது குறித்து தனது x தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "தமிழ்நாட்டில் பல இடங்களில் நேற்று(நவ.2) வெயில் அதிகபட்சமாக பதிவாகியிருக்கிறது. இன்றும் (நவ.3) வெயில் உச்சத்தை எட்டும். நேற்று வட மாவட்டங்களில் அடித்த வெயிலுக்கு ஒரு குட்டி பிரேக்காக இடி, மின்னலுடன் மழை பெய்திருக்கிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்திருக்கிறது.

மற்றபடி தமிழகத்தின் இதர பகுதிகளில் வறண்ட வானிலைதான் நிலவுகிறது. இன்று மழையை பொறுத்தவரை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் இரண்டாவது நாளாக 95.72 பாரன்ஹீட் அளவுக்கும், சென்னை மீனம்பாக்கத்தில் மூன்றாவது நாளாக 94.82 பாரன்ஹீட் அளவுக்கும், வேலூரில் மூன்றாவத நாளாக 96.26 பாரன்ஹீட் அளவுக்கும், அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் இரண்டாவது நாளாக 99.32 பாரன்ஹீட் அளவுக்கும், மதுரை நகர் பகுதியில் நான்காவது நாளாக 97.16 பாரன்ஹீட் அளவுக்கும், நாகப்பட்டினத்தில் இரண்டாவது நாளாக 95.18 பாரன்ஹீட் அளவுக்கும், வெயில் பதிவாகியிருந்தது" என்று தெரிவித்திருந்தார்.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த வானிலை அறிவிப்பில், "கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (நவ.3) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவ.4ம் தேதி வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவ.5 மற்றும் 6ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவ.7ம் தேதி வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவ.8ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பை பொறுத்தவரை, இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4* செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (03-11-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்












Click it and Unblock the Notifications