"2015 vs 2023.." உண்மையில் எந்த வெள்ளம் ரொம்ப மோசம்? வெதர்மேன் தந்த நேர்மையான பதில்! என்ன சொன்னார்
சென்னை: இணையத்தில் 2015 மற்றும் 2023 வெள்ளத்தை ஒப்பிட்டு பெரிய விவாதமே நடந்து வரும் நிலையில், இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
மிக்ஜாம் புயல் ஒட்டுமொத்தமாகச் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களைப் புரட்டிப் போட்து. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கிய மழை சுமார் 24 மணி நேரம் இடைவிடாமல் கொட்டிய நிலையில் பாதிப்பு மிக மோசமாக இருந்தது. இதையடுத்து இப்போது மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க 2015 மற்றும் 2023இல் ஏற்பட்ட வெள்ளத்தை ஒப்பிட்டும் இணையத்தில் பல்வேறு தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கிறது. அதைவிட இது மோசம் என ஒரு தரப்பினரும்.. இல்லை 2015 வெள்ளம் தான் மோசம் என மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
வெதர்மேன்: இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "2023 வெள்ளம் 2015ஐ விட மோசமானதா.. இல்லை 2015 வெள்ளம் 2023ஐ விட மோசமானதா என விவாதமே நடந்து வருகிறது. என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு வெள்ளமும் தனித்துவமானது.. ஒன்றை மற்றொன்று ஒப்பிட முடியாது, கள சூழல், மழைப்பொழிவு மற்றும் கடல் சீற்றம், புயல் என எதுவும் ஒரே மாதிரியாக இருக்காது.. கடந்த 8 ஆண்டுகளில் நடந்த நகரமயமாக்கலையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
2015இல் அடையாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் (500-550 மி.மீ. மழை) கடுமையான மழை பெய்தது. டவுன் ஸ்ட்ரீம் பகுதிகளில் சராசரியாக 350 மிமீ - 400 மிமீ மழை ஒரே நாளில் பெய்தது. அதற்கு முன்பு நவம்பர் மாதம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 1000 மிமீ மழை பெய்திருந்தது. இதனால் டிசம்பர் மாதம் மண்ணால் அதிகளவில் நீரை உறிஞ்ச முடியவில்லை. அடையாறு நீர்பிடிப்பு பகுதிகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு மழை பெய்திருந்தது.
கனமழை: 2023ஐ பொறுத்தவரை அடையாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 500-550 மிமீ மழையும், upstream பகுதிகளில் 400-450 மிமீ மழையும் பெய்துள்ளது. பெரும்பாலும் இவை 24 மணி நேரத்தில் (ஞாயிறு முதல் திங்கள் இரவு வரை) பெய்திருந்ததது. இந்த முறை கூவம் மேல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 550-650 மி.மீ., அளவில் கடுமையான மழை இருந்தது. இதன் காரணமாகவே கூவம் செல்லும் பகுதிகளில் நீர் அதிகம் தேங்கியது.

மேலும் இந்த புயல் சுமார் 12-18 மணி நேரம் வரை சென்னைக் கடல் அருகிலேயே இருந்தது. அந்த புயல் மிகவும் மெதுவாக நகர்ந்ததால், ஆற்று நீரும் கூட கடலுக்குச் செல்லாமல் இருந்தது. மேலும், 2023இல் தென்மேற்குப் பருவக்காற்று சமயத்தில் மீனம்பாக்கத்தில் சுமார் 1000 மி.மீட்டர் மழை இருந்தது.. இந்த நவம்பர் மாதம் மட்டும் சென்னையில் சுமார் 20-22 நாட்கள் மழை பெய்தது.. குறிப்பா நவம்பர் 29ஆம் தேதி சென்னையில் 150 மிமீ மழை பெய்திருந்தது. இதுவும் மண்ணை அதிக ஈரப்பதம் கொண்டதாக மாற்றிவிட்டது.
இரண்டையும் விட இது மோசம்: அதேநேரம் 1985 மற்றும் 1996 ஆண்டுகளில் சென்னை எதிர்கொண்ட மழை தான் இதை விட மோசமானவை. அதேபோன்ற எதாவது ஒரு மழை பெய்தால் அது 2015 மற்றும் 2023ஐ விடப் பேரழிவை ஏற்படுத்தும்" என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பான டேட்டக்களையும் அவர் பகிர்ந்துள்ளார். அவரது இந்த போஸ்ட் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications