சென்னையை சுருட்டிய வெயில்.. எத்தனை நாட்களுக்கு வானிலை இப்படி இருக்கும்? வெதர்மேன் கொடுத்த அப்டேட்
சென்னை: சென்னை மீனம்பாக்கத்தில் இன்று 105 டிகிரி வெயில் பதிவாகி இருக்கிறது. இது இந்த ஆண்டின் மிகவும் வெப்பமான நாள் என்று குறிப்பிட்டிருக்கும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், இந்த நிலைமை சரியாக இன்னும் 2 நாட்கள் ஆகும் என்று தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு முழுவதும் வெயில் பொளந்து வருகிறது. குறிப்பாக வேலூர் போன்ற வட மேற்கு மாவட்டங்களில் வெயில் வரலாறு காணாத அளவுக்கு பதிவாகியிருக்கிறது. மறுபுறம் சென்னை போன்ற கடலோர மாவட்டங்களில் வெயில் + அதிக ஈரப்பதம் மக்களை வாட்டி வருகிறது.

இந்நிலையில் இன்று சென்னை மற்றும் வேலூரில் வெயில் தாக்கம் எப்படி இருந்தது என்பது குறித்தும், வெயில் எப்போது குறையும் என்பது குறித்தும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது, "சென்னை மீனம்பாக்கத்தில் வெப்பநிலை 40.6°C (105 F) ஆகப் பதிவாகி, இந்த ஆண்டின் மிக வெப்பமான நாளாக அமைந்தது. வேலூரில் வெப்பநிலை 42.8°C (109.04 F)ஆகப் பதிவாகி, அதுவும் இந்த ஆண்டின் மிக வெப்பமான நாளாக அமைந்தது.
அரக்கோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புயல் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் மட்டுமே காணப்படுகிறது. இன்னும் இரண்டு நாட்களுக்குப் பிறகு, சென்னையில் நிலவும் 40°C அளவிலான கடும் வெப்பம் தணியும். வெப்பநிலை சுமார் 3°C குறைந்து, 38°C (100.4 F) அளவை எட்டும்" என தெரிவித்திருக்கிறார்.
இது சென்னை மக்களுக்கு நிம்மதியை கொடுத்திருக்கிறது. சென்னை வெயில் அவ்வளவு சாதாரணமானது அல்ல. என்னதான் வேலூரில் வெயில் கொளுத்தினாலும், சென்னையில் வெயிலுடன் சேர்ந்த ஈரப்பதம், அப்படியே நம்மை பதம் பார்த்துவிடும். 10 நிமிடம் காலை வெயிலில் நடந்தால், வெந்நீரில் குளித்ததை போல வியர்த்து கொட்டும். எனவே எப்போது சென்னையில் வெயிலின் தாக்கம் குறையும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு வெதர்மேன் தற்போது குட் நியூஸ் சொல்லியிருக்கிறார்.
முன்னதாக இன்று மதியம் வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், இன்றும் நாளையும் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல, நாளை (மே.4) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- நீலகிரி
- கோயம்புத்தூர்
- திருப்பூர்
- தேனி
- திண்டுக்கல்
- ஈரோடு
- சேலம்
- நாமக்கல்
- திருச்சி
- அரியலூர்
- பெரம்பலூர்
- திருவண்ணாமலை
- கரூர்
- கள்ளக்குறிச்சி
ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும் என தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications