தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போது பெய்யும்? சரியான தேதியை சொன்ன வானிலை மையம்
சென்னை: தமிழகம் , ஆந்திராவுக்கு பலனை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை எப்போது பெய்யும் என்பத குறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த முறை இயல்பை காட்டிலும் கனமழை அதிகளவில் இருக்கும் என தெரிகிறது.
கேரளா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பலனை கொடுக்கும் தென் மேற்கு பருவமழை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த பருவமழை விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து அக்டோபர் மாதம் தொடங்கியதுமே வடகிழக்கு பருவமழை எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் கூறிய போது அக்டோபர் மாதம் 3ஆவது வாரத்தில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வரும் 15-ஆம் தேதியே வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு கனமழை வெளுத்து வாங்கியது. தமிழகத்தில் வரும் 9ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (05.10.2024) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், திண்டுக்கல், தேனி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.
வங்கக்கடல் பகுதிகள், அரபிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று (05.10.2024) செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications