சென்னைக்கு கனமழை எப்போது?! ஆழ்ந்த காற்றழுத்தம் புயலாக மாறுமா? பாலச்சந்திரன் பதில்
சென்னை: நாளை மறுநாள் கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என்பதால் அந்த 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருப்பதாக சென்னை வானிலை மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது கூறியிருப்பதாவது: தென் கிழக்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்றைய தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தற்போது நாகையிலிருந்து 880 கி.மீ. தூரத்தில் உள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறும். இது வடமேற்காக இலங்கை - தமிழக கடற்கரை நோக்கி அடுத்த இரு நாட்களில் நகரும். இதனால் வரும் 4 நாட்களுக்கு வடதமிழக பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் கடலூர், மயிலாடுதுறைக்கு, நாகை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரத்தில் அதிக கனமழையும் கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
சென்னையில் 27, 28 ஆகிய தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மீனவர்கள் 5 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனையொட்டிய, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், நேற்று முன்தினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.நேற்றைய நிலவரப்படி, இது அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. இன்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. சென்னையில் இருத்து 1,050 கி.மீ., தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.
அதற்கு அடுத்த இரண்டு நாட்களில் மேலும் வலுவடைந்து, தமிழகம், இலங்கை கரையை நோக்கி நகரும். இதனால், தமிழகத்தில் இன்று மாலைக்கு பின், மழை படிப்படியாக அதிகரிக்கும். வரும், 29ம் தேதி வரை மிதமான மழை தொடரும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில், இன்று(நவ.,25) ஓரிரு இடங்களில் 20 செ.மீ., வரை, மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்றும், நாளையும் வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம். காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், பல்வேறு இடங்களில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.
26-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
27-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications