மிக்ஜாம் புயல் ருத்ர தாண்டவம்.. மின்சாரம் இல்லாததால் கழிவறைக்கு கூட நீர் இல்லை! சென்னைவாசிகள் வேதனை
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாகத் தலைநகர் சென்னையில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில், பொதுமக்கள் குடிநீர், கழிவறை நீருக்கே கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இந்த புயலால் சென்னை மொத்தமாக முடங்கி இருக்கிறது என்பதே உண்மை.
தலைநகர் சென்னையை மிக்ஜாம் புயல் மொத்தமாகப் புரட்டிப் போட்டுவிட்டது. எல்லா இடங்களிலும் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், பல முக்கிய இடங்களில் நேற்று முழுக்க நீர் தேங்கி நின்றது. தொடர் மழையாலும் வெள்ளத்தைக் கடல் உள்வாங்காததாலும் மழை நீர் வடிவதிலும் கூட தாமதம் ஏற்பட்டது.

நேற்றிரவு தான் மழை விட்ட நிலையில், இப்போது மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இருப்பினும், இன்னும் கூட எல்லாமே சரியாகிவிட்டது எனச் சொல்ல முடியாது. இன்னும் பல இடங்களில் நீர் தேங்கியே இருக்கிறது.
கொட்டிய கனமழை: இதற்கிடையே கனமழையால் சென்னையில் பல பகுதிகளில் 2 நாட்களாக கரண்ட் இல்லை.. சில பகுதிகளில் மட்டுமே நேற்றிரவும் இன்று அதிகாலையும் மின்சாரம் வந்தது. மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். மோட்டார் போட முடியாததால் பல இடங்களில் கழிவறை நீருக்கும் கூட சிக்கல் ஏற்பட்டது.
மிக்ஜாம் புயல் காரணமாகப் பாதிப்பு மோசமாக இருக்கும் என்று பலருக்கும் ஏற்கனவே முன்னெச்சரிக்கை விடப்பட்டிருந்ததால்.. பலரும் தங்கள் வீடுகளில் உள்ள தண்ணீர் டேங்குகளை நிரப்பி வைத்திருந்தனர். கனமழையால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், பலரும் இந்த நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும், சில இடங்களில் இரண்டு நாட்கள் மின்சாரம் இல்லாததால் அவையும் தண்ணீர் டேங்கில் இருக்கும் நீரும் காலியாகும் சூழல் இருக்கிறது.
கழிவறைக்கு கூட நீர் இல்லை: இன்னும் சில மணி நேரத்தில் மட்டுமே அந்த நீரை வைத்துச் சமாளிக்க முடியும் என்றும் இதனால் மின் இணைப்பை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாகத் தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் வெள்ள நீர் வடியாத நிலையில், அங்கே இந்த நிலைதான் இருக்கிறது. மின் இணைப்பு இல்லாமல் நீர் தீர்ந்துவிட்டால் சாலைகளில் தேங்கியுள்ள நீரை எடுத்துப் பயன்படுத்த வேண்டிய அவல நிலை இருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
மேலும், நேற்று கனமழை கொட்டிய நிலையில், போரூரில் சில பகுதிகளில் பொதுமக்கள் அந்த நீரையே பிடித்துப் பயன்படுத்தியுள்ளனர். மழை நேற்று பல மணி நேரம் கொட்டிய நிலையில், மின்சாரம் இருக்காது என்பதை உணர்ந்த மக்கள், மழை நீரைப் பிடித்துப் பயன்படுத்தி உள்ளனர். இதுபோல மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.
குடிநீர் கூட இல்லை: அதேபோல சில இடங்களில் குடிநீரும் சிக்கல் நிலவுகிறது. சென்னையைப் பொறுத்தவரை பெரும்பாலான மக்கள் கேன் தண்ணீரை தான் பயன்படுத்துவார்கள். கனமழை காரணமாக கேன் தண்ணீரைப் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் கேன் சப்ளை செய்யக் கூடுதல் பணம் கேட்பதாகவும் கூறப்படுகிறது.
அம்பத்தூர் பகுதிகளில் மழை நீர் அதிகம் தேங்கி இருக்கும் நிலையில், அங்கும் குடிநீருக்கே சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் கொடுத்து வாங்கும் நிலைக்குப் பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். இதனால் குடிநீர் பெறப் பொதுமக்கள் சிரமத்தை எதிர்கொள்ளாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications