சென்னைவாசிகளுக்கு குஷி.. இடி, மின்னலென மழை.. நடுவானில் சுற்றி சுற்றி வந்த விமானம்.. கடுப்பான பயணிகள்
சென்னை: சென்னையில் மாலையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று வீசியதன் காரணமாக, சென்னைவாசிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.. ஆனால், விமான சேவை வெகுவாக பாதிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்றிரவு முழுவதும் சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் மழை வெளுத்துக்கட்டியது.

விமான சேவை: இதனால் கடந்த சில நாட்களாக சென்னையில் நிலவிய வெப்பம் தணிந்தது.. ஆனால், நேற்றிரவு முழுக்க மழை பெய்த நிலையில், விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.. சார்ஜா, துபாயில் இருந்து வந்த பயணிகள் விமானங்களும் துருக்கியிலிருந்து வந்த சரக்கு விமானமும் தரையிறங்க முடியாத காரணத்தால் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன.
இதேபோல் சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்குப் புறப்பட வேண்டிய பத்து விமானங்களின் புறப்பாடு தாமதமானது.. இந்நிலையில், இன்றைய தினமும் மழை தொடர்ந்தது..
காற்று திசை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது..
அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை 3.30 மணியிலிருந்தே மழை ஆரம்பித்துவிட்டது.. கிட்டத்தட்ட 2 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து கனமழை கொட்டியது.. மேலும் பலத்த காற்றும் வீசியது. இந்த கனமழை, மற்றும் காற்று காரணமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய வந்த 3 உள்நாட்டு விமானங்களும், சென்னையில் தரையிறங்க முடியவில்லை. இதனால் அரை மணி நேரத்திற்கும் மேலாக வானத்திலேயே தொடர்ந்து வட்டமடித்தன.
3 விமானங்கள்: இதேபோல, திருச்சியில் 62 பயணிகளுடன் சென்னைக்கு மாலை 3.45 மணிக்கு தலைரயிறங்க வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், இப்படியேதான் தரையிறங்க முடியாமல் ரவுண்டு அடித்தது.. அதேபோல, கொச்சியில் இருந்து 127 பயணிகளுடன் மாலை 4.30 மணிக்கு சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மைசூரில் இருந்து 58 பயணிகளுடன் மாலை 4.40 மணிக்கு சென்னையில் தரையிறங்கவேண்டிய விமானமும், தரையிறங்க முடியவில்லை.

சென்னை புறநகர் பகுதிகளில் மழை, காற்று ஓரளவு குறைய ஆரம்பித்த பிறகுதான், திருச்சி மைசூர், கொச்சி விமானங்கள்
ஒவ்வொன்றாக தரையிறங்கின.. இந்த மழை, காற்று காரணமாக, சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களான, ஹைதராபாத், டெல்லி, கோவை, மதுரை, கவுகாத்தி, கொல்கத்தாஉள்ளிட்ட 8 விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன..
கடுப்பான பயணிகள்: ஆக, இன்று மாலை பெய்த கனமழையால், 5 வருகை விமானங்களும், 8 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 13 விமானங்கள் தாமதமாகிவிட்டன.. இது விமான பயணிகளை கடுப்பாக்கிவிட்டது.. உரிய நேரத்தில் விமான பயணங்களை மேற்கொள்ள முடியாமல், வெகுவாக பயணிகள் பாதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications