Chennai Rain: அடுத்த 3 மணி நேரம் சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்.. கனமழை பிச்சு உதறும்.. 19 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு நிற அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று இரவு 7 மணி வரை மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், திருச்சி, அரியலூர், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர் உள்பட 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
நேற்று (09-01-2026) தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வலுவிழந்து இன்று (10-01-2026) காலை 5.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, வடகிழக்கு இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.
இது மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில், முல்லைத்தீவிற்கு (இலங்கை) கிழக்கு - தென்கிழக்கே சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலும், திரிகோணமலைக்கு (இலங்கை) வடக்கு - வடகிழக்கே 60 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 450 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
மிக கனமழை அலர்ட்
இது மேலும், மேற்கு -வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு இலங்கை கடலோரப்பகுதிகளில், திரிகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னைக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை
இதேபோன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் கூறியிருந்தது.
இந்த நிலையில் இன்று மாலையே சென்னையில் மழை பெய்யப் போவதாக வானிலை மையம் ஆரஞ்சு நிற அலர்ட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அடுத்த 2 மணி நேரத்தில்
* "தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இரவு 7 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
* இதேபோன்று மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, திருவாரூர், ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், கடலூர், திண்டுக்கல், கரூர், மதுரை, பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக சென்னையில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்திருந்தது.












Click it and Unblock the Notifications