டிட்வா புயல்! சென்னையில் எந்த பகுதியில் அதிகபட்ச மழை தெரியுமா?
சென்னை: டிட்வா புயல் வலுவிழந்த நிலையிலும் சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையில் அதிகபட்சமாக பாரிமுனையில் 26.5 செ.மீ. பதிவாகியுள்ளது. இந்த தகவலை சென்னை மாநகராட்சி வெளியிட்டது.
சென்னை கடற்கரை அருகே டிட்வா புயல் வலுவிழந்தாலும் நேற்று காலை முதலே சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை 5.30 மணி முதல் இன்று காலை 5.30 மணி வரை பெய்த மழையின் அளவை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி அதிகபட்சமாக பாரிமுனையில் 26.5 செ.மீ. மழை பெய்துள்ளது. எண்ணூரில் 24 செ.மீ. மழையும் ஐஸ் ஹவுஸில் 23 செ.மீ. மழையும் பேசின் பிரிட்ஜில் 21 செ.மீ. மழையும் மணலி புதுநகரத்தில் 21 செ.மீ.மழையும் பதிவாகியுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னைக்கு கிழக்கே சுமார் 50 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அதற்கடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, சென்னையில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் இருக்கக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை (புதன்கிழமை) முதல் 5-ஆம் தேதி வரையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications