வீட்டுக்குள் வெள்ளம் வந்துருச்சு சார்..அடுத்த வருஷமாவது சரி பண்ணுங்க! வேதனையுடன் பேசிய நடிகர் ஸ்ரீமன்
சென்னை: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் கோடம்பாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில் கனமழை காரணமாக தனது வீட்டிற்குள் மழை நீர் புகுந்ததால் நடிகர் ஸ்ரீமன் தனது வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு சென்றுள்ளதாக கூறியுள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் தலைநகரான சென்னை மட்டுமல்லாது, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முதலை கனமழை பெய்து வருகிறது.

மேலும், வரும் 17ஆம் தேதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கேடிசிசி எனப்படும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதை அடுத்து தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருந்த போதும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக மாநகர் பகுதிகளான சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், தாம்பரம், பல்லாவரம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
நேற்று சுமார் ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் பெய்த மழை காரணமாக பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக ஓஎம்ஆர், கந்தன் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது .மேலும் பல்லாவரம், புளியந்தோப்பு, பள்ளிக்கரணை, முடிச்சூர் ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
இந்த நிலையில் கோடம்பாக்கம் பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில் பிரபல நடிகரான ஸ்ரீமன் வீட்டுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் குடும்பத்தினரின் பாதுகாப்பு கருதி வேறு பகுதிக்கு சென்றுள்ளதாக ஸ்ரீமன் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளரிடம் பேசிய அவர்,” மழை பெய்து வீட்டுக்குள் தண்ணீர் வந்து விட்டதால் வேறு வழி தெரியவில்லை. மழை பெய்யும் என ஓரளவு கணித்து ஏற்கனவே சொல்லிவிட்டார்கள்.
ஆனால் இவ்வளவு தண்ணீர் வரும் என்று எப்படி தெரியும். எனது வீட்டிற்குள்ளேயும் தண்ணீர் வரத் தொடங்கி விட்டது. இன்னொரு வீடு இருப்பதால் அங்கு சென்று விட்டோம். வீட்டுக்குள் தண்ணீர் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. யாரையும் குறை சொல்வதற்கும் எதுவும் இல்லை. ஆனால் இன்னும் ஏதாவது செய்தி இருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்னவோ அப்படின்னு தெரியவில்லை.
20 நாட்களுக்கு செய்ய வேண்டிய மழை ஒரு நாளில் பெய்துள்ளது. ஆனால் மழைநீர் வடிகால் பணிகளை இன்னும் வேகமாக முடித்து இருந்தால் எதிர்காலத்தில் தப்பிக்கலாம். எனக்கு வீடு இருப்பதால் வேறு இடத்திற்கு சென்று விட்டேன். எத்தனை பேருக்கு வேறு இடம் இருக்கும் என தெரியவில்லை. குறை சொன்னால் சொல்லிக் கொண்டே இருக்கலாம். அடுத்த வருஷம் இதுபோன்ற பிரச்சனைகள் இல்லாமல் பார்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும்” என கூறினார்.












Click it and Unblock the Notifications