சென்னை மக்களே ரெடியா? நெருங்கும் மழை மேகங்கள்.. இன்று இரவு கனமழை வெளுக்கும்.. வெதர்மேன் சொன்ன அலர்ட்
சென்னை: சென்னையில் இப்போது மழை மேகங்கள் சூழ்ந்திருக்கும் நிலையில், இன்றிரவு வரை சென்னையில் பல இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வெதர்மேன் தெரிவித்துள்ளார். இந்த மழை நீண்ட நேரம் இருக்காது என்றும் குறுகிய நேரத்தில் கனமழை கொட்டுவது போலவே இருக்கும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தப் பருவமழை சீசனில் ஓரளவுக்கு நல்ல மழை தொடர்ந்து பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். குறிப்பாகக் கடந்த சில நாட்களாகவே மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

அதிலும் மாலை தொடங்கி இரவு வரை மழை பெய்வதால் வெப்பம் குளிர்ந்து குளிர்ச்சியான ஒரு வானிலை நிலவுகிறது. சென்னையிலும் கூட கடந்த இரு நாட்களாகவே நல்ல மழை பெய்திருக்கிறது. இதற்கிடையே சென்னையை இன்றும் மழை மேகங்கள் நெருங்குவதாகத் தெரிவித்துள்ள வெதர்மேன் பிரதீப் ஜான் அடுத்த சில மணி நேரம் நல்ல மழை சென்னைக்கு இருக்கும் எனக் கூறியிருக்கிறார்
இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில், "ரெடியா சென்னை? இடியுடன் கூடிய மழை மேகங்களின் நுழைவாயிலாகக் கருதப்படும் ஆவடியை நெருங்கியுள்ளது. சென்னையின் பிற பகுதிகளுக்கும் மழை வரவுள்ளதற்கான பொதுவான அறிகுறிதான் இது!
அடுத்தபடியாக அம்பத்தூர் பகுதியிலும், அதைத் தொடர்ந்து சென்னையின் பிற இடங்களிலும் தீவிரமான, ஆனால் குறுகிய நேரம் மட்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த இரண்டு நாட்களைப் போல இது ஒரு பெரிய மழை அமைப்பு அல்ல. இதனால் சென்னையின் சில பகுதிகளில் மழை பெய்யாமல் கூட போகலாம்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications