மேம்பாலத்தில் கார் பார்க் செய்தவர்களுக்கு ஷாக் செய்தி.. அபராதம் விதிக்கும் போக்குவரத்து போலீசார்!
சென்னை: சென்னையில் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கார் உரிமையாளர்கள் தங்கள் கார்களை காப்பாற்ற, அவற்றை வேளச்சேரி, பள்ளிக்கரணை மேம்பாலங்கள் மீது பார்க் செய்துள்ளனர். மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். அதைத்தொடர்ந்து, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் வரும் 17 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் நாளை மறுநாள் (அக்டோபர் 16) மற்றும் 17 ஆம் தேதிகளில் அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நாளை முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
சென்னைக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி மேம்பாலத்தில் பலரும் கார்களை நிறுத்தி வருகின்றனர். மழைக் காலங்களில் தாழ்வான பகுதியான வேளச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துவிடும்.
இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நீரில் மூழ்குவதால் பழுதாகிவிடும். கார்களில் தண்ணீர் புகுவதால் ஏற்படும் பழுதை சரி செய்ய அதிக செலவு ஏற்படும். இதனால் அப்பகுதி மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி மேம்பாலத்தின் மீது தங்கள் கார்களை நிறுத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத பெருமழை பெய்தது. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியது. கனமழை காரணமாக வேளச்சேரியில் தண்ணீர் தேங்கி குடியிருப்புகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், வெள்ள நீரில் மிதந்தன. மழைநீர் ஒரு வார காலத்துக்கு வடியாததால் வாகனங்கள் பழுதாகின.
இந்நிலையில் தான் வேளச்சேரி மக்கள் உஷாராக தற்போது தங்கள் கார்களை மேம்பாலத்தில் நிறுத்தி உள்ளனர். பாலத்தில் அதிகளவில் வாகனங்களை நிறுத்தி வருவதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வேளச்சேரி போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியும் மக்கள் மேம்பாலத்தின் மீது வாகனங்களை நிறுத்தி உள்ளனர்.
வேளச்சேரி - பள்ளிக்கரணை இணைப்பு மேம்பாலத்தில் வரிசையாக நிறுத்தி வைத்துள்ள கார்களின் பதிவு எண்களை போக்குவரத்து போலீசார் குறித்துச் சென்றுள்ளனர். பாலத்தின் மீது பார்க்கிங் செய்யப்பட்டுள்ள கார்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications