அத்தியாவசிய பொருட்களை பதுக்கி அதிக விலைக்கு விற்றால் கடுமையான ஆக்ஷன்.. கலெக்டர் எச்சரிக்கை!
சென்னை: அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மழைக் காலங்களில் அத்தியாவசிய பொருட்களான பால் மற்றும் உணவுகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க உள்ள நிலையில், 16ம் தேதி ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கன மழையும், ஒரு சில இடங்களில் அதி கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு அருகில் இருக்கும் காய்கறி கடைகள், மளிகை கடைகளில் மக்கள் குவிந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். ஏற்கனவே, தமிழக அரசு அத்தியாவசியப் பொருட்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் இருக்காது என அறிவித்திருந்த நிலையில், மக்கள் மழை வெள்ளத்தின் மீது இருக்கும் அச்சத்தினால் இயல்பாக வாங்கும் பொருட்களை விட அதிகமாக வாங்கி செல்கின்றனர்.
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் கடைகளில் இப்போதே அத்தியாவசிய பொருட்கள் பல இருப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. தங்கள் பகுதிகளில் உள்ள கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததால், வேறு ஏரியாக்களுக்கு சென்று பலரும் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
மேலும், சிலர் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. பொருட்களை மொத்தமாக வாங்கி வைத்து, டிமாண்ட் அதிகரிக்கும்போது அதிக விலைக்கு விற்க சிலர் திட்டமிட்டுள்ளதாகவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

இந்நிலையில், மழைக்காலங்களில் பால் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மழைக் காலங்களில் அத்தியாவசிய பொருட்களான பால் மற்றும் உணவுகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications