“டானா” புயல் கரையை கடந்தபிறகும் கண்ணை திருப்புமா? திடீர் எச்சரிக்கை! அலறும் ஒடிசா! என்ன நடக்கும்?
டெல்லி: அதிதீவிர புயலாக உருவெடுத்து ஒடிசா, மேற்கு வங்க மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள டானா புயல் நாளை தெற்கு ஒடிசாவில் கரையைக் கடந்த பிறகு மேற்கு மற்றும் தென்மேற்கு திசை நோக்கி சிறிது வளைந்து திரும்ப வாய்ப்புள்ளதாக புவனேஸ்வர் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், புயல் தீவிரமிழந்துவிடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
வங்கக் கடலில் உருவான டானா புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ள நிலையில் இன்று நள்ளிரவு அல்லது நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் டானா புயலால் பாதிக்கப்படும் இடங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். முன்னெச்சரிககி நடவடிக்கையாக பேரிடர் மீட்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

டானா புயல்: டானா புயல், பிதர்கனிகா தேசிய பூங்கா மற்றும் தாம்ரா துறைமுகத்துக்கு இடை யே கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டானா புயல் கரையைக் கடக்கும் போது ஒடிசாவில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், அதேபோல் மேற்கு வங்கத்தின் மேற்கு பகுதி மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடக்கும் போது காற்று மணிக்கு 120 கிமீ வேகத்தில் வீசும். அதனால், இன்று இரவு முதல் நாளை காலை வரை கனமழை, காற்று மற்றும் இடி, மின்னல் போன்றவை உச்சத்தில் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாதிப்பு கடுமையாக இருக்கக்கூடும்: டானா புயல் கரையைக் கடக்கும் போது, கடலில் அலைகள் 2 மீட்டர் உயரத்துக்கு எழும்பக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டானா புயல் கரையைக் கடந்த பின்பு ஒடிசாவில் பெரும்பானா மக்கள் புயலால் பெரும் பாதிப்பைச் சந்தித்திருப்பார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

டானா புயல் குறித்து புவனேஸ்வர் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் மனோரமா மொஹந்தி கூறுகையில், "12 கி.மீ வேகத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் டானா புயலானது நகர்ந்து கொண்டுள்ளது. தற்போது ஒடிசாவின் பாரதிப்புக்கு 260 கி.மீ தொலைவிலும், தாமரவுக்கு தெற்கு - தென்கிழக்கே 290 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கு 350 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: அடுத்த 24 மணி நேரத்திற்கு மயூர்பஞ்ச், கேந்திரபாரா, பாலசோர், பத்ரக், ஜாஜ்பூர், கட்டாக் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, இந்த அனைத்து மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பூரி, கோர்தா, நாயகர், தேன்கனல், கியோஞ்சர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சுந்தர்கர், தியோகர், அங்குல், பௌத், கந்தமால், கஞ்சம், ஜார்சுகுடா மற்றும் சம்பல்பூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் கடுமையான சூறாவளி புயல் ஏற்பட்டுள்ள சூழலில், அக்டோபர் 26ஆம் தேதி மீண்டும் தெற்கு ஒடிசாவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
புயல் மீண்டும் திரும்பும்: அக்டோபர் 26 ஆம் தேதி தெற்கு ஒடிசா மாவட்டங்களில் கனமழையை ஏற்படுத்திய பின்னர் டானா புயல் மேற்கு மற்றும் தென் மேற்கு திசையில் சிறிது திசை மாறி திரும்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது." என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரீ-கர்வேச்சர் (Recurvature) என்பது புயலின் பாதையில் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கிறது. பொதுவாக, புயல்கள் மேற்கு நோக்கிய பாதையை பின்பற்றுகின்றன. இருப்பினும், ஒரு புயல் வடக்கு திசையை நோக்கி திசைமாறி, பின்னர் கிழக்கு நோக்கி செல்லும் பாதைக்கு மாறும்போது, இந்த மாற்றம் ரீ-கர்வேச்சர் என்று அழைக்கப்படுகிறது. அப்படி நடக்கும்போது, மீண்டும் கனமழை பெய்யக்கூடும்.
வெதர்மேன் சொன்ன தகவல்: ஆனால், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், கரையைக் கடந்த பிறகு டானா புயல் தீவிரமிழந்துவிடும், அது திரும்பி பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பில்லை எனக் கூறியுள்ளார். டானா புயல் திசை மாறினால் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு இவ்வாறு கூறியுள்ளார் வெதர்மேன்.












Click it and Unblock the Notifications