தாண்டவமாடும் மிக்ஜாம் புயல்.. சென்னை உள்பட 6 மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக இன்று சென்னை உள்பட 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் 'மிக்ஜாம்' புயல் நேற்று 23.30 மணி அளவில் அதே பகுதிகளில் புதுச்சேரிக்கு கிழக்கு- வடகிழக்கே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும்.
அதன்பிறகு தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து 05-12- 2023 முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்கக்கூடும். இந்த புயல் காரணமா சென்னை உள்பட பல மாவட்டங்களில் விடியவிடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 90 கி.மீ. முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். சில நேரங்களில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தான் புயல் காரணமாக சென்னை உள்பட 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் திருவண்ணமாலை மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் செய்யாறு வருவாய் கோட்டத்தை சார்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக் மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இன்று வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications