முழுசா புயலாக மாறிய நம்ம மிக்ஜாமை பாருங்க!.. நடுக்கடலில் சுற்றும் சங்கு சக்கரம்! கிளம்பிருச்சே!
சென்னை: தெற்கு வங்கக் கடலில் டிசம்பர் 3 ஆம் தேதி உருவாகும் புயலாக தற்போது முழு வடிவம் பெற்றுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதே பகுதியில் நிலவி வருகிறது.

இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக் கூடும்.
இதற்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என கணிக்கப்பட்டது. ஆனால் இது தாமதமானதால் டிசம்பர் 2ஆம் தேதி புயல் உருவாகும் என கணிக்கப்பட்ட புயல் டிசம்பர் 3 ஆம் தேதி மிக்ஜாம் புயல் உருவாகும்.
இந்த நிலையில் சென்னையில் நேற்று மாலை 5 மணி முதல் இரவு வரை மணிக்கணக்கில் விடாமல் அடைமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பெரும்பாலான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் படகு மூலம் மக்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள்.
அடையாறு, கூவம், செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட நீர் நிலைகளின் கரைகளில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் மெரினா கடற்கரையில் மணல் திட்டுக்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மெரினாவில் சிறிய கடைகள் இருக்கும் பகுதி, ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள் இருக்கும் பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இந்த மிக்ஜாம் புயல் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி உருவாகி வடதமிழகம்- தெற்கு ஆந்திரா நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இது அங்கேயே நீடிக்குமா இல்லை வலுவிழக்குமா, இல்லை கரையை கடக்குமா என்பது போக போகத்தான் தெரியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மிக்ஜாம் புயல் அதன் வடிவத்தை பெற்றுள்ளதாக வீடியோவுடன் சென்னை வெதர் ட்விட்டர் பேஜ் போட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வெதர் வெளியிட்ட பதிவில் வர போகும் புயல தற்போது தெற்கு ஆந்திரா அருகே புயலாக முழு வடிவம் பெற்றுள்ளது. டிசம்பர் 4 ஆம் தேதி 24 மணி நேரத்தில் 100 மி.மீ. மழை பெய்வது சாத்தியம் என தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் மோதி அந்த இடத்தில் ஒரு சுழற்சி உருவாகி வெற்றிடம் தோன்றியுள்ளது. இந்த புயல் எங்கே கரையை கடக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இது தெற்கு ஆந்திராவுக்கு போகாமல் சென்னை டூ பாண்டிச்சேரி இடையே கரையை கடக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை. இந்த புயல் எங்கே செல்லும் என்பதற்கு பல்வேறு காரணிகள் காரணங்களாக அமைகின்றன.












Click it and Unblock the Notifications