வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று இரவு சம்பவம்! எங்கெல்லாம் கனமழை பெய்யும்?
சென்னை: வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று இன்று மாலை அல்லது இரவு ஒடிசாவின் புரி மற்றும் மேற்குவங்கத்தின் தீகா கடற்கரை இடையே கடக்கக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒருவாரமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் கூட விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதேபோன்று குமரி, தென்காசி மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நேற்று தமிழகத்தின் கோவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை , நீலகிரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்தது.

அதிகபட்சமாக கோவை வால்பாறை, சின்கோனாவில் 5 செமீ அளவிற்கு மழை பெய்துள்ளது. இன்றும் தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று இன்று மாலை அல்லது இரவு ஒடிசாவின் புரி மற்றும் மேற்குவங்கத்தின் தீகா கடற்கரை இடையே கடக்கக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை 5.30 மணியளவில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 8.30 மணி அளவில் ஆந்திர மாநிலம் கலிங்கபட்டினத்திற்கு கிழக்கே 280 கிலோ மீட்டர், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு கிழக்கு - தென்கிழக்கே 230 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது வடக்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா - மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை அல்லது இரவு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க கடற்கரையை புரி (ஒடிசா) மற்றும் தீகா (மேற்கு வங்கம்) இடையே கடக்கக் கூடும்.
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதேபோன்று தரைக்காற்று 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்களும் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.
இதேபோல் நாளை முதல் 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் இன்று முதல் 12 ஆம் தேதி வரை மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். என்று வானிலை மையம் கூறியுள்ளது. துறைமுகங்களுக்கு வரும் கப்பல்களுக்கு, துறைமுகத்திற்கு பெரிய சேதம் ஏதுவும் ஏற்படாமல் இருக்க முன்எச்சரிக்கையாக, சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகம், நாகப்பட்டினம் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications