ஆட்டம் காட்டும் “ரெமல்”.. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.. நாளை காலை புயலாக தீவிரமடையுமாம்!
டெல்லி: வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது "ரெமல்" புயலாக வலுப்பெற்று வங்கதேசத்தை நோக்கி நகரக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவியது.

ரெமல் புயல்: இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (மே 24) மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேலும் அதே திசையில் நகர்ந்து நாளை (மே 25) புயலாக உருவாகும். உருவாக உள்ள தீவிர புயலுக்கு "REMAL" என்று பெயரிடப்பட்டுள்ளது. ஓமன் நாடு 'ரெமல்' எனப் பெயர் வழங்கியுள்ளது.
ரெமல் புயல் 26ஆம் தேதி நள்ளிரவில் சாகர் தீவு மற்றும் கெபுபாரா இடையே வங்காளதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடற்கரையில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வருகிற 26ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை குறையும்?: கடந்த 2 வாரங்களாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் சற்றே தணிந்தது. திருச்சியில் 93 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோடை மழை பதிவானது.
இந்நிலையில், இப்போது வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும்போது தமிழகத்துக்கான மழை வாய்ப்பு படிப்படியாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மழைப் பொழிவு குறையத் தொடங்கிய நிலையில் இந்தப் புயல் வலுப்பெற பெற மழை முற்றிலுமாக நீங்கும்.
இன்று மழை: இப்போதைக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வாய்ப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் இன்று பகல் 1 மணி வரை கோவை, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, விருதுநகர், திண்டுக்கள் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
ரெமல் புயல் எதிரொலி.. தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! அடுத்த 1 மணி நேரம் கவனம் q
இந்தப் புயல் வலுப்பெற்ற பின்னர் ஒரு சில வட மாவட்டங்களில் மீண்டும் கடுமையான வெப்பம் ஏற்படும். அதேவேளையில், கேரளாவில் அதிகனமழை, கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக கொச்சி போன்ற நகரங்களில் மழை வாய்ப்பு அதிகமாக உள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு: அதேபோல், கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அரபிக்கடல் பகுதிகளில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்பில்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications