சென்னைதான் டார்கெட்.. வங்கக்கடலில் சம்பவம் இருக்கு! அடுத்த 3 நாட்கள் இதுதான் நடக்கும்!
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது மெல்ல வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவின் கடற்கரையை நோக்கி நகர்ந்துள்ளது. எனவே கடந்த இரண்டு நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பரம் மாதம் சென்னைக்கு தலைவலிதான். காரணம் இயல்பை விட அதிக அளவில் பெய்யும் பருவமழை. இயல்பான பருமழையாக இருந்தால் சென்னை தாங்கும். ஆனால், மாறி வரும் காலநிலை மாற்றம் காரணமாக, ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை அனைத்தும் ஒரே நாட்களில் பெய்துவிடுவதால் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டுவிடுகிறது. கடந்த 2015ல் தொடங்கி இப்போது வரை இப்படித்தான் இருக்கிறது.

இந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் வரை காத்திருக்காமல் சற்று முன்னதாகவே பருமழை தொடங்கியுள்ளது. மழை குறித்து இன்று விடுக்கப்பட்டிருந்த வானிலை அறிவிப்பில், “நேற்று காலை தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 5.30 மணி அளவில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, இன்று 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது.
இது மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இதனால் இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதுமேலும் வலுவடையும்பட்சத்தில், புயலாக மாறும். அப்படி புயலாக மாறினால் அது சென்னையை ஒட்டிய பகுதியில் கரையை கடக்கும். இது அதிக கனமழையை கொடுக்கும். இதுதான் ரியலான ரெட் அலர்ட் டைம் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications