வாங்க வருண பகவானே! கொட்டும் கனமழை, பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.. எங்கே தெரியுமா?
நீலகிரி : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சனிக்கிழமை 4 தாலுகாக்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய நான்கு தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், வட மாவட்டங்கள், கொங்கு பகுதிகளில் நல்ல மழை பெய்தது. தற்போதும் காலையில் லேசாக வெயில் இருந்தாலும் மாலைக்கு மேல் பலத்த காற்றுடன் பொழிவு இருக்கிறது. இதனால் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குறிப்பாக தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று ஒடிசா கடற்கரையை நோக்கி 2 நாட்களில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள காரணத்தாலும், தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் வலுவான காற்றுடன் கூடிய மழை இன்று பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.
சொன்னது போலவே நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. . இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் வெளியே வரவே அச்சப்படும் நிலைமை இருக்கிறது. மேலும் சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்துள்ளதால் வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.
தற்போதும் அங்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நீலகிரியில் அதிதீவிர கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில் அங்கு தொடர்மழை பெய்து வருகிறது. மேலும் சனிக்கிழமையும் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்ட மலைப்பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் நான்கு தாலுகாக்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் ஜூலை 20ம் தேதி (சனிக்கிழமை) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. வரும் ஜூலை 21 முதல் 25 வரையிலான தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications