வந்தாச்சு வடகிழக்கு பருவமழை! அக்.31 வரை சென்னையில் வானிலை நிலவரம் என்ன?.. நார்வே ரிப்போர்ட் இதோ!
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அக்டோபர் மாதம் முழுவதும் சென்னையில் எப்படிப்பட்ட வானிலை நிலவும் என்பது குறித்து நார்வே வானிலை மையத்தின் அறிக்கையை பார்க்கலாம்.
தமிழகம், கேரளம், தெற்கு கர்நாடகம், தெற்கு ஆந்திரா, ராயசீலா ஆகிய பகுதிகளுக்கு மழைப் பொழிவை கொடுப்பது வடகிழக்கு பருவமழை. ஏற்கெனவே இருந்த தென்மேற்கு பருவமழை காலம் நேற்று முன் தினத்துடன் முடிவடைந்துவிட்டது.

இந்த தென்மேற்கு பருவமழை விலகாமல் இருந்ததே வடகிழக்கு பருவமழை தீவிரமடையாமல் இருப்பதற்கான காரணம் என்கிறார்கள். மேலும் இதனால் வடகிழக்கு பருவமழை தென் இந்தியாவில் தாமதமாக தீவிரமடையும் என்கிறார்கள்.
இந்த நிலையில் தற்போது வங்கக் கடலில் ஒரு குறைந்த காற்றழுத்தம் தொடங்கியுள்ளது. அது போல் அரபிக் கடலில் தேஜ் எனும் புயல் மிகத் தீவிர புயலாக மாறியுள்ளது. இதனால் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை சென்னையின் சில இடங்களில் லேசான மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இன்றைய தினம் சென்னையில் வெயில் எட்டி பார்க்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த மாதம் எப்போதெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்து நார்வே வானிலை மையம் கணித்துள்ளதை பார்க்கலாம்.
அதாவது இந்த மாதம் 31 ஆம் தேதி வரை சென்னையில் மழைக்கு வாய்ப்பே இல்லையாம். வெயிலும் மேக மூட்டமும் மாறி மாறி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை நவம்பர் மாதம் மட்டுமே தீவிரமடைய வாய்ப்பிருக்கலாம் என தெரிகிறது. காற்றை அடிப்படையாக கொண்டே இந்த வானிலை தகவல்கள குறிக்கப்படுகிறது.
ஆனால் அந்த காற்றின் திசை மாறினாலும் திடீரென வங்கக் கடலில் காற்றழுத்தம் உருவாகினாலும் இந்த கணிப்புகளில் மாற்றம் ஏற்படலாம். அதிலும் 31 ஆம் தேதி மாலை நிலவரம் நார்வே ரிப்போர்ட்டில் கொடுக்கப்படவில்லை. ஒரு வேளை அன்றைய தினம் வானிலையில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கலாம் என தெரிகிறது. பொதுவாக 5 நாட்களுக்கு உண்டான வானிலை கணிப்புகளை மட்டுமே நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் கணிப்பது சில சமயங்களில் தவறாக போகலாம் என்பதே வானிலை மைய ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications