வீட்டில் ஏசி அதிகம் பயன்படுத்தினாலும் மின் கட்டணம் பாதியாக வர வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்
சென்னை: சும்மாவே கரண்ட் பில்லை பார்த்தால் பலருக்கும் கண்ணை கட்டும்.. இப்போது கண்ணை கட்டும் அளவிற்கு வெயில் சுட்டெரிக்கிறது. தற்போதைய நிலையில் ஏசி அதிகம் பயன்படுத்தினாலும் மின்சாரம் குறைவாக வர வேண்டும் என்றால், சில விஷயங்களை நீங்கள் பின்பற்ற வேண்டும்.
மார்ச் மாதம் பிறந்தாலே வெயில் அதிகரித்து விடும்.. சென்னையில் எல்லாம் சாலையில் செருப்பு இல்லாமல் இரண்டு நிமிடம் நடந்தாலே கால் புண்ணாகிவிடும். அவ்வளவு வெயில் அடிக்கிறது. குளுகுளுவென இருக்கு தண்ணீர் பாட்டில்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கி குடிக்கிறார்கள்.. வழக்கத்தைவிட பழங்கள் அதிக அளவு வாங்கி ஜூஸ் போட்டுகுடிக்கிறார்கள். உடலில் அதிகப்படியான நீர் சத்து வெளியேறுவதை தடுக்க, அதிகமாக தண்ணீர் அருந்துவது, பழங்கள் அதிகம் சாப்பிடுவது, சிக்கன் உள்ளிட்ட அசைவ உணவுகளை குறைப்பது என மக்கள் கோடைக் காலத்திற்கு ஏற்றபடி வாழ்ந்து வருகிறார்கள்.

எப்படி வெயில் காலம் வந்த உடன் உடலில் நீர் சத்து வெளியேறுவதை தடுக்கவும், உடல் வெப்ப நிலையை குறைக்கவும் நாம் பல்வேறு விஷயங்களை செய்கிறோமோ, அதுபோல் வெயில் காலம் வந்தால் மின்சாரம் வழக்கத்தைவிட 3 மடங்கு அதிகம் ஆக வாய்ப்பு உள்ளது. ஏசி பயன்பாடு, ஃபேன் பயன்பாடு, பிரிட்ஜ் பயன்பாடு, வாஷிங் மெஷின் பயன்பாடு போன்றவை அதிகமாக இருக்கும் என்பதால் மின் கட்டணம் அதிகமாகும் வாய்ப்பு உள்ளது.
எனவே வெயில் காலத்தில் மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றால் அதற்கு சில சிக்கன நடவடிக்கைகளை நாம் செய்தாக வேண்டும். அதேபோல் சில தியாகங்களையும் நாம் செய்தாக வேண்டும். வெயில் காலம் என்பதால் ஏசி பயன்பாடு அதிகரிக்கும் . எனவே தேவையற்ற நேரங்களில் ஏசியை கண்டிப்பாக ஆஃப் செய்துவிட வேண்டும். பலரும் ஏசியை மெயின் சுவிட்சை அணைக்காமல், ரிமோட்டில் மட்டும் ஆப் செய்வார்கள். ஆனால் அப்படி செய்யக்கூடாது.. ஏசியை பயன்படுத்தாத போது மெயின் சுவிட்சை அணைக்க வேண்டும்.
அதேபோல் சரியான வெப்பநிலையில் ஏசியை இயக்க வேண்டும். 24 டிகிரி வெப்ப நிலை மனித உடலுக்கான ஐடியல் வெப்பநிலை. இப்படி 24 சதவீதத்தில் ஏசியை இயக்கினால், 6 சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்கலாம் என்கிறார்கள். எனவே வீட்டிற்கு வந்த உடன் உடல் வெப்ப நிலையை குறைக்க 16 அல்லது 18 டிகிரி வைப்பதற்கு பதிலாக 24 டிகிரியில் ஏசி இயக்கினால் நல்லது.
அதேபோல் நீண்ட நாள் பயன்படுத்தாமல் கோடைக்காலத்தில் ஏசியை பயன்படுத்தும் முன்பு கண்டிப்பாக சர்வீஸ் செய்தாக வேண்டும். ஏசி சர்வீஸ் செய்தால் மின்சாரத்திற்கு செலவு குறைவதுடன், குளிர்ந்த காற்றைக் கொடுக்க அதிகமாக செயல்பட வேண்டிய அவசியம் இருக்காது.
ஏசியை போட்டுவிட்டு அடிக்கடி ஜன்னல் மற்றும் கதவுகளை திறப்பது நல்லது அல்ல. அப்படி செய்தால் குளிர்ந்த காற்று அறையை விட்டு வெளியேறிவிடும். இதனால், அறை குளிர்ச்சியாக அதிக நேரம் எடுக்கும் என்பதால் மின் நுகர்வு அதிகரித்து மின் கட்டணம் அதிகரிக்கும் எனவே.. ஏசியை பயன்படுத்தினால் கண்டிப்பாக அறை கதவுகளை மூடி வையுங்கள்.

அதேபோல் ஏசியை பயன்படுத்தும் போது மின் விசிறியை பயன்படுத்தினால் விரைவாக அறை குளிர்ந்து விடும். ஏசியின் குளிர்ந்த காற்றை அறை முழுவதும் மின் விசிறி வேகமாக பரப்பிவிடும். எனவே, இது AC இயந்திரத்தின் நேரத்தையும் மிச்சப்படுத்த உதவும். அதேநேரம் மிக குறைவான நேரம் மட்டும் மின் விசிறியை இயக்கினாலே போதும்..
ஏசியை பொறுத்தவரை இப்போது மின்சாரத்தை சேமிக்கும் வகையில் இன்வெர்ட்டர் ஏசிகள் விற்பனைக்கு வந்துள்ளன. ஏசியை பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் அப்டேட் வருகிறது.. மின்சாரத்தை அதிகம் சேமிக்கும் அதேநேரம் பராமரிப்பு அதிகம் தேவைப்படாத ஏசியாக பார்த்து வாங்க வேண்டும்.. ஏசியை பொறுத்தவரை பொருளாதாரம் மற்றும் ஸ்லீப் போன்ற பல்வேறு மோடுகளை சரியாக பயன்படுத்தினால், மின்சாரத்தை நிச்சயம் சேமிக்கலாம். இதை பற்றி ஏசி வாங்கும் போதே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
ஏசி தவிர மற்ற விஷயங்களிலும் மின்சாரத்தை சேமிக்க வேண்டும். கோடைக்காலம் என்பதால் முதலில் வீட்டில் உள்ள விளக்குகளை எல்இடிக்களாக மாற்றுங்கள். அதேபோல் கோடைக்காலத்தில் ஹீட்டர் போட்டு சுடுதண்ணீரில் குளிக்காமல் பச்சை தண்ணீரில் குளிக்க வேண்டும்.. அதேபோல் கோடைக்காலத்தில் மின் கட்டணம் குறைவாக வர வேண்டும் என்றால், வாஷிங் மெஷின் பயன்பாட்டை கணிசமாக குறைக்க வேண்டும். அதேபோல் ஆள் இல்லாத நேரங்களில் ஃபேன் மற்றும் லைட் ஓடுவதை உடனே கவனித்து அணைக்க வேண்டும். மிக்சியை பயன்படுத்தினால் கண்டிப்பாக கையோடு சுவிட்சையும் ஆப் செய்யவேண்டும். இப்படி செய்வதன் மூலம் கணிசமாக மின் நுகர்வு குறையும். மின் கட்டணமும் குறையும்.












Click it and Unblock the Notifications