டெல்லியை சூழ்ந்த வெள்ளம்.. சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
டெல்லி: டெல்லியில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. இதனால், மக்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டிருக்கின்றனர். சாலைகளில் வெள்ளம் வடியாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவுக்கு வடகிழக்கு மற்றும் தென்மேற்கு என இரண்டு பருவமழைகள் மழையை கொடுக்கும். இதில் தென்மேற்கு பருவமழை முக்கியமானது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம் தேதி தொடங்கும் இந்த பருவமழை நாட்டின் 70% மழைப்பொழிவை பூர்த்தி செய்கிறது. இந்த ஆண்டு சற்று முன்கூட்டியே பருவமழை தொடங்கியதால் பல்வேறு மாநிலங்களில் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் இன்று அதிகாலை டெல்லியில் கனமழை பெய்திருக்கிறது.

மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியிருக்கிறது. சாலைகளில் மழை நீர் வடியாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சாந்தி பாதை, நௌரோஜி நகர், பிகாஜி காமா பிளேஸ், மோதி பாக் ரிங் ரோடு உள்ளிட்ட பல சாலைகளில் வெள்ளம் தேங்கியிருக்கிறது.
இதுவரை 13 நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல 7 மரங்கள் வேரோடு சரிந்திருக்கின்றன. மழை அடுத்த சில மணி நேரங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே டெல்லிக்கு சனிக்கிழமை வரை மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.
மழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், "வெப்பச்சலனம் காரணமாக டெல்லியில் அடுத்த சில மணி நேரங்களுக்கு மழை நீடிக்கக்கூடும். பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சில இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ஹரியானா, டெல்லி என்சிஆர், உத்தரபிரதேசம், ஜம்மு-காஷ்மீர், வடமேற்கு பஞ்சாப், கிழக்கு மத்தியப் பிரதேசம், தெற்கு குஜராத், சத்தீஸ்கர், கர்நாடகா, தெலுங்கானா, ராயலசீமா, ஒடிசா, கடலோர ஆந்திரா மற்றும் கிழக்கு அஸ்ஸாம் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவிலும் கனமழை பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. புனே, மும்பை, பால்கர், தானே மற்றும் ராய்காட் ஆகிய பகுதிகளில் கனமழை வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த பகுதிகளில் உள்ளி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்களில் சிக்கித் தவித்த 160 பேரை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.
மழை வெள்ளம் காரணமாக தற்போதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் பரவலாக அடுத்த சில மணி நேரங்களுக்கு கனமழை பெய்யும் என்பதால் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்கின்றனர். மழை காரணமாக யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications