இது 'கோடை' இல்லை.. கொட்டும் மழைக்காலம்! பகல் 1 மணி வரை 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு+மஞ்சள் அலர்ட்!
சென்னை: தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியுள்ளதால், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய மாவட்டங்களில் மழை தீவிரமெடுத்து வருகிறது. இந்நிலையில், மதியம் 1 மணி வரை 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
அதாவது, தென்காசி மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களுக்கு லேசான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடக மாநிலத்தின் கடலோர மாவட்டங்களிலும், கேரளாவின் இடுக்கியிலும் கனமழை பெய்திருக்கிறது. நேற்று இடுக்கியில் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டிருக்கிறது. கர்நாடகாவை பொறுத்தவரை, அதிகபட்சமாக நேற்று தட்சிண கன்னடா புத்தூர் பெலந்துரு பகுதியில் 48 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியிருக்கிறது. இன்றும் தட்சிண கன்னடா பகுதியில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல அடுத்து வரும் நாட்களை பொறுத்தவரை, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தென்காசி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
ஜூன்1 முதல் 5 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications