கொட்டுதே நான்-ஸ்டாப் மழை.. அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உட்பட 9 மாவட்டங்களில் பெரிய சம்பவம்
சென்னை: நேற்றிரவு சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தலைநகர் சென்னையில் நேற்று மாலை தொடங்கிய கனமழை இரவு வரை கொட்டி தீர்த்தது. கேகே நகர், கிண்டி, அடையாறு என நகர்ப் பகுதிகள் மட்டுமின்றி, தாம்பரம், ஆவடி, கும்மிடிப்பூண்டி எனப் புறநகர்ப் பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது.

நகரின் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டிய நிலையில், பல முக்கிய சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில பகுதிகளில் மழை நீர் தேங்கிய நிலையில், வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
கனமழை: கனமழையால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இரவு சற்று தாமதமாக அலுவலகங்களில் இருந்து கிளம்பியவர்கள் மிகக் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டனர். மேலும், மழையால் சில சுரங்கப்பாதைகளும் மூடப்பட்டன. மழை நீர் தேங்கியதால் அவற்றை அகற்றும் பணிகளையும் சென்னை மாநகராட்சி தீவிரமாக மேற்கொண்டது.
இதனிடையே இன்று காலை பல்வேறு இடங்களில் நீர் தேங்கியது வடிந்துவிட்டது. இருப்பினும், மற்ற இடங்களில் தேங்கியுள்ள நீரை அகற்றும் பணிகள் படுவேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மொத்தம் 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
9 மாவட்டங்களில் மழை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை மையம் அலர்ட் கொடுத்துள்ளது. இந்த பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் நிலையில், பல்வேறு இடங்களிலும் நீர் தேங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கடந்த 28ஆம் தேதி காலை 08.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 05.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகத் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது.
வானிலை என்ன: இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் டிச. 2ஆம் தேதி வாக்கில் புயலாக வலுப்பெறக் கூடும் என்று கூறப்படுகிறது.
மேலும், வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலும், இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications