மிக்ஜாம் ஓய்ந்தாலும் மழை ஓயாது போலயே.. அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மழை
சென்னை: மிக்ஜாம் புயல் ருத்திர தாண்டவம் ஆடிவிட்டுச் சென்றுள்ள நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடல் பகுதிகளில் மிக்ஜாம் புயல் உருவான நிலையில், இதனால் சென்னையில் கடந்த 48 மணி நேரமாகக் கனமழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் இரவு முதலே சென்னையில் மழை ஆரம்பித்தது.

விடிய விடிய கேப் விடாமல் கன மழை கொட்டி வந்தது. ஏற்கனவே கனமழை பெய்யும் என்றும் இதனால் பொது மக்கள் வீடுகளிலேயே இருக்கும்படியும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் பல முக்கிய இடங்களிலும் நீர் தேங்கியது. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்ட நிலையில், சென்னை மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். மேலும், நேற்று மழை பெய்த போது மழை வெள்ளத்தைக் கடல் உள்வாங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டது. அதாவது கடல் சீற்றம் காரணமாக ஆற்று வெள்ளத்தைக் கடல் உள்வாங்கவில்லை. இதன் காரணமாகவே மழை நீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார்.
மேலும், இந்தப் புயலும் இப்போது சென்னையில் இருந்து சுமார் 200 கிமீ தொலைவில் சென்றுவிட்டது. முக்கிய பகுதிகளில் நீர் வடிந்து வரும் நிலையில், பொதுமக்கள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்திற்குச் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கன்னியாகுமரி, நெல்லை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "05.12.2023: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வரும் டிச. 6 மற்றும் டிச. 7 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச. 8 முதல் டிச. 10 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications