‛‛அனலை கக்கும் வெயில்’’.. சென்னையை விட மோசமான பெங்களூர்.. பூங்கா நகரில் வாடும் மக்கள்.. ஷாக் டேட்டா
பெங்களூர்: ‛கார்டன் சிட்டி' என பெயர் பெற்ற பெங்களூருவில் தற்போது வெயில் கொளுத்தி எடுக்கிறது. பொதுவாக சென்னையை ஒப்பிடும்போது பெங்களூரில் வெயில் என்பது குறைவாக இருக்கும் என கூறப்படும் நிலையில் தற்போது அது முற்றிலுமாக மாறி உள்ளது. அதாவது கடந்த 10 நாட்களாக சென்னையை விட பெங்களூரில் தான் வெயில் மண்டையை பிளந்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூர்... ‛பூங்கா நகரம்' என புனைப்பெயர் பெற்ற கர்நாடகாவின் தலைநகர் குளுகுளு சீதோஷ்ண நிலைக்கு பெயர் பெற்றது. 2010 காலக்கட்டத்தில் நகரின் பல இடங்களில் சாலையோரத்தில் மரங்கள் ஓங்கி வளர்ந்து நிழல் தரும் குடைகளாக இருந்தன. குறிப்பாக கோடை காலத்திலும் கூட பெங்களூர் நகர் என்பது அதிக வெப்பம் இன்றி இருக்கும்.

இதனால் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் பெங்களூரை நோக்கி நகர்ந்தன. ஆனால் இப்போது பெங்களூர் நகரின் நிலைமை அப்படியே மாறிப்போய் உள்ளது. அதாவது மெட்ரோ பணி உள்பட வெவ்வேறு கட்டுமான பணிகளுக்காக மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் தற்போது பெங்களூர் நகரில் வெயில் என்பது அதிகரித்துள்ளது.
குறிப்பாக பெங்களூரை காட்டிலும் சென்னையில் தான் வெயில் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுவது உண்டு. ஆனால் இன்றைய சூழலில் அந்த நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. அதாவது கடந்த 10 நாட்களாக சென்னையில் வெயில் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் பெங்களூரையும் விட்டு வைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் சென்னையை விட பெங்களூரில் வெயில் என்பது அதிகரித்துள்ளது.
உதாரணமாக சென்னையில் கடந்த பிப்ரவரி 11ம் தேதி சராசரி வெப்பநிலை என்பது 28 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. இந்த வெப்பத்தின் அளவு பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் 27 டிகிரி செல்சியஸாகவும், பிப்ரவரி 14ம் தேதி 28 டிகிரி செல்சியஸாகவும், பிப்ரவரி 15ல் 27 டிகிரி செல்சியஸாகவும், 16, 17 ஆகிய தேதிகளில் மீண்டும் 28 டிகிரி செல்சியஸாகவும், 18, 19, 20 ஆகிய தேதிகளில் 30 டிகிரி செல்சியஸாகவும் வெப்பம் இருந்தது. இன்றைய தினம் 31 டிகிரி செல்சியஸை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
மாறாக பெங்களூரில் வெப்பம் என்பது சென்னையை காட்டிலும் அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த 11ம் தேதி 29 டிகிரி செல்சியஸாகவும், 12, 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் 30 டிகிரி செல்சியஸாகவும், 17, 18, 19 ஆகிய தேதிகளில் 31 டிகிரி செல்சியஸாகவும், நேற்று 32 டிகிரி செல்சியஸாகவும் வெப்பம் இருந்தது. இன்றைய தினம் பெங்களூரில் வெப்பம் என்பது 35 டிகிரி செல்சியஸாக கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
இதன்மூலம் சென்னையை விட பெங்களூரில் வெயில் என்பது அதிகரித்துள்ளது. இந்த வெயில் அதிகரித்துள்ளதற்கு போதிய மழையின்மை மற்றும் காலநிலையில் ஏற்பட்ட மாற்றம் தான் காரணம் என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தற்போது பிப்ரவரி மாதம் தான் நடக்கிறது. இன்னும் கோடைக்காலம் தொடங்கவே இல்லை. இத்தகைய சூழலில் இப்போதே பெங்களூரின் வெப்பம் என்பது சென்னையை விட அதிகரித்துள்ளதால் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இன்னும் மக்கள் கூடுதல் சிரமங்களை சந்திக்கும் நிலை ஏற்படும் என்ற அச்சம் உருவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications