அடுத்த 3 மணி நேரம் ரொம்ப முக்கியம்.. சென்னை, செங்கல்பட்டு உட்பட 20 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் நல்ல மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பருவமழை ஆரம்பித்தது முதலே கணிசமாக மழை பெய்து வருகிறது. குறிப்பாகக் கோவை, நீலகிரி உட்பட மேற்குத் தொடர்ச்சி மாவட்டங்களை ஓட்டியுள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்கிறது.

அதேபோல சென்னையிலும் கூட மாலை மற்றும் இரவு நேரங்களில் பெரும்பாலான நாட்கள் மழை பெய்கிறது. இதனால் பொதுமக்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்திற்குத் தமிழகத்தில் மொத்தம் உள்ள 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 மணி நேரம்: இரவு 7 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக நகரில் சில இடங்களில் நீர் தேங்கலாம்.. மேலும், சாலைகளில் நீர் தேங்கி டிராபிக் பாதிப்பும் ஏற்படலாம் என்பதால் பொதுமக்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பில், " மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 -40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
மேலும், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும்; திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை இருக்கு: நாளை ஜூலை 16ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 -40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 17 முதல் 21 வரையிலான நாட்களில் : தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 - 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications