சென்னையை சூழும் மழை மேகங்கள்.. புறநகரிலும் சம்பவம் இருக்கு.. 9 மாவட்டங்களுக்கு இரவு வரை அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் உட்பட 9 பகுதிகளில் மாலை 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியது முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுக்க இருக்கும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

அதிலும் குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் நல்ல மழை கொட்டி வருகிறது. இதனால் ஒருவித குளிர்ச்சியான வானிலையே தொடர்ந்து நிலவுகிறது.
சென்னை + புறநகர்: இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையின் நகர்ப் பகுதி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதாவது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதற்காக மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கலாம் என்பதால் டிராபிக் பாதிப்பும் ஏற்படும் என்றும் இதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை மையம்: மேலும், வானிலை மையம் வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை தொடரும் என்றே வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று ஆக.9ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 - 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை ஆக. 10ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 - 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மழை இருக்கு: வரும் ஆக. 11ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 - 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளிலும் நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications