மக்கள் பாதுகாப்பாக இருக்காங்களா.. அமைச்சர்கள், எம்எல்ஏக்களிடம் டெலிபோனில் பேசி விசாரித்த முதல்வர்
சென்னை: புயல், மழை பாதிப்பு தொடர்பாக அமைச்சர் மற்றும் எம்எல்ஏக்களிடம் தொலைபேசி வாயிலாக முதல்வர் மு.க ஸ்டாலின் கேட்டறிந்தார். செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், மக்கள் பாதுகாப்பாக இருக்கிறீறார்களா என்றும் மழை பாதிப்பு குறித்தும் கேட்டறிந்தார்.
மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக சென்னை நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மக்களின் இயல்பு வாழ்க்கையை அப்படியே முடக்கிப்போட்டது மிக்ஜாம் புயல். தற்போது மிக்ஜாம் புயல் சென்னையை கடந்துவிட்டபோது நள்ளிரவு வரை நீடிக்கலாம் என்றும், தற்போதில் இருந்தே மழை படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும் புயல், மழை, வெள்ளம் காரணமாக ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் புயல், மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பல்வேறு குழுக்களும், ஐஏஎஸ் அதிகாரிகளையும் நியமனம் செய்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
மேலும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களையும் மீட்பு பணிகளையும், நிவாரண பணிகளையும் பார்வையிடுமாறும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறும் அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் புயல், மழை பாதிப்பு தொடர்பாக அமைச்சர் மற்றும் எம்எல்ஏக்களிடம் தொலைபேசி வாயிலாக முதல்வர் மு.க ஸ்டாலின் கேட்டறிந்தார். மக்கள் பாதுகாப்பாக இருக்கிறீறார்களா என்றும் மழை பாதிப்புகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- மு.க. ஸ்டாலின் இன்று (4.12.2023) முகாம் அலுவலகத்திலிருந்து மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் நா. எழிலன். திரு. இ. கருணாநிதி, திரு. இ. பரந்தாமன், திரு. எஸ். அரவிந்த் ரமேஷ் மற்றும் திரு.வி.க. நகர் கண்காணிப்பு அலுவலர் திரு. கணேசன், இ.ஆ.ப., ஆகியோரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மிக்ஜாம் புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் குறித்தும் கேட்டறிந்ததோடு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன் அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட மாண்புமிகு முதலமைச்சர், மிக்ஜாம் புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது சட்டமன்ற உறுப்பினர் மரு. எழிலன் அவர்கள் ஆயிரம் விளக்கு பகுதியில் 30,000 குடும்பங்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு சாப்பாடு வழங்கப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக 16 முகாம்கள் மற்றும் பள்ளிக்கூடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து திரு.வி.க. நகர் கண்காணிப்பு அலுவலர் திரு. கணேசன், இ.ஆ.ப., அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் ஸ்டாலின், கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது திரு. கணேசன் அவர்கள், கொளத்தூர் மற்றும் திரு.வி.க. நகர் பகுதியில் 20,000 மக்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
பின்னர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பயு அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் விவரங்கள் குறித்தும், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும் கேட்டறிந்தார். அப்போது மாண்புமிகு அமைச்சர் அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்படும் உணவைத் தவிர. கூடுதலாக மற்றொரு இடத்தில் உணவு தயாரிக்கப்பட்டு தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் திரு. இ. கருணாநிதி அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், எத்தனை முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை கேட்டார். அப்போது சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் 8 இடங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும், அவர்களுக்கு தேவையான மூன்று வேளை உணவும் வழங்கப்பட்டுள்ளதோடு, போர்வையும் வழங்கி உள்ளதாக தெரிவித்தார்,
பின்னர், சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். அரவிந்த் ரமேஷ் அவர்களிடம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொலைபேசி வாயிலாக பேசியபோது, 158 பேர் ஒரு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான உணவு வழங்கப்பட்டுள்ளதாகவும், மாண்புமிகு அமைச்சர் திரு. சி.வி. கணேசன் அவர்கள் நேரில் வந்து பார்வையிட்டு சென்றதாகவும் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார்.
நிறைவாக, சட்டமன்ற உறுப்பினர் திரு. இ. பரந்தாமன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், கனமழையால் அப்பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். முகாமில் தங்கியுள்ள பொதுமக்களிடம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொலைபேசியில் பேசியபோது, அவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் வசதிகள் குறித்து கேட்டறிந்து, தைரியமாக இருங்கள், உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்று தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு. மாண்புமிகு பொதுப்பணித் துறை திரு.எ.வ. வேலு ஆகியோர் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications