குடை எடுங்க.. ஜூன் 4ல் தென்மேற்கு பருவமழை கன்பார்ம்! தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
சென்னை: இந்திய துணைக்கண்டத்தின் வாழ்வாதாரமாக விளங்கும் தென்மேற்கு பருவமழை நடப்பு ஆண்டில் எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வந்த நிலையில், கேரளா மற்றும் தமிழகப் பகுதிகளில் நாளை அதாவது ஜூன் 4ம் தேதி பருவமழை அதிகாரப்பூர்வமாகத் துவங்க சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதையடுத்து, இன்றும், நாளையும் தமிழகத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வருடந்தோறும் வழக்கமாக ஜூன் 1-ம் தேதியே கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி, செப்டம்பர் மாதம் வரை நீடிப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பருவமழை துவங்குவதில் திடீர் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட எல் நினோ எனப்படும் கடுமையான காலநிலை மாற்றத்தின் காரணமாகவே இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர்.
நாளை தென்மேற்கு பருவமழை
முன்னதாக மே 26-ம் தேதியே பருவமழை துவங்கிவிடும் என்று இந்திய வானிலை மையம் கணித்திருந்த நிலையில், எல் நினோ தாக்கத்தால் முந்தைய கணிப்பை மாற்றி, தற்போது ஜூன் 4-ம் தேதி மழை துவங்கும் என்று புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இப்போது தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவுகள், கேரளா மற்றும் தமிழகம் ஆகிய பகுதிகளில் பருவமழை துவங்குவதற்கான மேகக்கூட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
அதேசமயம், வங்கக்கடலின் தென்கிழக்கு, மத்திய மேற்கு, மத்திய கிழக்கு, வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளிலும் பருவமழை அதிவேகமாகத் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக கேரளா மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா மற்றும் ஒடிஷா ஆகிய மாநிலங்களிலும் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை
இந்த மழை தீவிரமடைவதற்குக் காரணமாக, தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வலுவான வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. மேலும், கிழக்கு மத்திய பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய சத்தீஷ்கார் பகுதிகளின் மேல் நிலவும் இன்னொரு வளிமண்டல சுழற்சியில் இருந்து வடக்கு தமிழகம் வரை விதர்பா, தெலுங்கானா மற்றும் ராயலசீமா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நீடித்து நிலவுகிறது.
இந்தத் திடீர் காலநிலை மாற்றங்களால் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை சேர்வலாறு அணை, பள்ளிப்பட்டு மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் அதிகபட்சமாக தலா 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் இன்றும் நாளையும் தமிழகத்துக்கு கனமழை வாய்ப்பு உள்ளதாம்.
16 மாவட்டங்களில் கனமழை
அதாவது நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், தென்காசி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஜூன் 5-ம் தேதியன்று பருவமழையின் வேகம் மேலும் அதிகரித்து நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்க்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னைக்கு மழை உண்டா
வரும் ஜூன் 8-ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை, நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், பகல் நேர வெப்பநிலை இயல்பான அளவிலேயே இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications