கோடையில் கூல் ஆகப் போகும் மாவட்டங்கள்.. 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! மெட் கொடுத்த ஜில் அப்டேட்
சென்னை: இந்தியா முழுவதும் இன்று முதல் வெப்ப அலை வீச வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் தேனி திண்டுக்கல் கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த ஆண்டு கோடைக் காலம் பிப்ரவரியிலேயே தொடங்கி விட்டதை போல் தான் இருக்கிறது. கடந்த 110 ஆண்டுகளில் இல்லாத அளவு பிப்ரவரி மாதத்தில் வெப்பநிலை பதிவானது. அதற்கு பிறகு வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்தது.
ஏப்ரல் மாத தொடக்கத்தில் மழை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சிறிது மழையை கொடுத்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் வெப்ப அலை வீச வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 30ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை அதிகமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டு இருக்கிறது.

குறிப்பாக மேற்கு மத்திய பிரதேசத்தில் 30ஆம் தேதி வரையும், கிழக்கு மத்திய பிரதேச பகுதிகளில் 27 ஆம் தேதி வரை உத்தரபிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், ஒடிசா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கடரோட ஆந்திரா மற்றும் காரைக்காலில் வெப்பம் மற்றும் ஈரமான வானிலை காணப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வெப்ப அலை காரணமாக பல்வேறு மாநிலங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று தேனி, திண்டுக்கல், நெல்லை, உள்ளிட்டு ஏழு மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதியில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னுடன் கூடிய லேசானது முதல் மிதமான கனமழை பெய்யக்கூடும் எனவும், தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை தேனி, திண்டுக்கல், கடலூர், திருப்பூர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என கணித்துள்ளது.
தமிழகத்தில் இன்று சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கலாம். அதிக வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் குறைந்தபட்ச வெப்பநிலையில் இருக்கலாம். இதனால் ஒரு சில இடங்களில் அசெளகரியம் ஏற்படலாம். சென்னையைப் பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்-ஐ ஒட்டியும் இருக்கும். தமிழக பகுதிகளில் வங்கக்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.












Click it and Unblock the Notifications